2000 ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் ரூபாய் கமிஷன்.!சினிமா பட பாணியில் 35 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல்

By Ajmal KhanFirst Published Jul 23, 2023, 12:24 PM IST
Highlights

2000ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் ரூபாய் கமிஷன் தரப்படும் என ஆசை வார்த்தை கூறி விவசாயி ஒருவரிடம் 35 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு தனது சொந்த பணத்தை இழந்தவர்களின் கதையை அதிகமாக கேட்டிருப்போம். அந்த வகையில், 2000ஆயிரம் பணத்தை மாற்றி கொடுத்தால் 15 லட்சம் கமிஷனாக கிடைக்கும் என கூறி 35 லட்சம் பணத்தை சினிமா பட பாணியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி சிவாஜி. இவருக்கு உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் உறவினர் மூலம் அறிமுகமாகி நண்பர்களாக பழகி வந்து உள்ளனர். பாண்டி சிவாஜியிடம் ஈரோட்டில் தனக்கு தெரிந்த ராஜ்குமார் என்ற நண்பரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் கோடிக்கணக்கில் இருப்பதாகவும்,  

தற்போது 50 லட்சம் ரூபாய் தொகையை மாற்றி கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு நாம் 35 லட்சம் மட்டுமே கொடுத்தால் போதும் என்றும் இதனை செய்தால் 15 லட்சம் கமிஷனாக கிடைக்கும்  என ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார். இதனை நம்பி பணத்திற்கு ஆசை பட்ட விவசாயி சிவாஜி வங்கியில் இருந்த 35 லட்சம் ரூபாய்யை எடுத்துக்கொண்டு உறவினர்கள் செந்தில், மாதேஸ்குமார், மற்றும் டிரைவர் குபேந்திரன்  உள்ளிட்டோருடன் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் பகுதியில் உள்ள புறவழிச்சாலை பகுதிக்கு  சென்றனர். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் பணம் தருவதாக கூறி  தனது காரில் சிவாஜி மற்றும் அவர்களது உறவினர்கள் ஆகியோரை ஏற்றி கொண்டு பெருந்துறை நோக்கி சென்றனர்.  

அப்போது எதிரே காரில் வந்த 4 பேர் ராஜ்குமாரின் காரை மறித்து போலீஸ் உடையில் வந்தவர்கள் தங்களை அரசு அதிகாரிகள் என்று கூறி பணத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து  சிவாஜி மற்றும் அவர்களது உறவினர்களை காரில் இருந்து இறக்கி விட்டு விட்டு, காரில் இருந்த 35 லட்சம் ரூபாயுடன் ராஜ்குமாரை விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி தப்பி சென்றுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் உண்மையா.? பொய்யா.? என அறிவதற்குள் பணத்தை அபேஷ் செய்துவிட்டு அந்த கும்பல் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவாஜி மொடக்குறிச்சி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து களத்தில் இறங்கிய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

அப்போது  கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரி போல் வேடமணிந்து வந்தவரான நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாதேஷையும் போலீசார் கைது செய்துள்ளனர். மாதேஷிடம் இருந்து கட்டுக்கட்டாக பணத்தில் நடுவில் வெள்ளை பக்கங்களை கொண்ட போலீயான ரூபாய் நோட்டுக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும்  சினிமாவிற்கு பயன்படுத்த கூடிய காவலர் உடை ,கார்  உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சினிமா பட பாணியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

click me!