
சென்னை திருவான்மியூர் பகுதியில் இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது தாய் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். நேற்று குமாரின் தாய்க்கு 16ம் நாள் காரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக நடந்த விருந்தில் இதில் குமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். குமாரின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் (27), அருண்குமார் (22) ஆகியோர் காரியம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பட்டதாரி வாலிபர்களான இவர்கள் இருவரும் காரிய நிகழ்ச்சியையொட்டி மது அருந்தினர். அப்போது, அதேபகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என்ற வாலிபருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் தகராறை விலக்கி விட்டுள்ளனர். இருப்பினும் இந்த பிரச்சனை ஓயவில்லை. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11 மணியளவில் சதீஷ்குமார், அருண்குமாரும் நண்பர் குமாரின் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தினேஷ்குமாரும் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது மீண்டும் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர்.
அப்போது சதீஷ் குமாரும், அருண்குமாரும் சேர்ந்து தினேஷ்குமாரை பார்த்து உன்னை கொலை செய்யாமல் விட மாட்டேன் ஆத்திரத்தில் கூறியுள்ளனர். அதேபோல், தினேஷ்குமார் நான் உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று கடும் கோபத்தில் கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற அவர் சிறிது நேரத்தில் பெரிய கத்தியுடன் வந்து சதீஷ்குமார், அருண்குமார் இருவரையும் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரட்டை கொலை செய்த தினேஷ்குமார் திருவான்மியூர் போலீசில் சரணடைந்தார். நள்ளிரவில் நடந்த இரட்டை கொலை சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.