NeoCov Virus:தேவையற்ற கருத்துகளை பகிர வேண்டாம்.. சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

By Thanalakshmi VFirst Published Jan 29, 2022, 9:43 PM IST
Highlights

நியோகோவ் வைரஸ் குறித்து தேவையற்ற கருத்துகளை பகிர வேண்டாம் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

சீனாவின் வூகான் வைராலஜி ஆய்வகம் மற்றும் சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் கொரோனா குடும்பத்தை சேர்ந்த ‘நியோகோவ்’ என்ற புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. வெளவ்வாலிடம் ‘நியோகோவ்’ கொரோனா வைரஸ் காணப்படுகிறது. இந்த வைரசில் இருந்து ஒரு மரபணு மாற்றம் ஏற்பட்டால் கூட மனிதர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்த வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்த கூடியதாகும். ‘நியோகோவ்’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் 3-ல் ஒருவர் உயிரிழக்க கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் வாழும் வெளவ்வாலிடம்‘நியோகோவ்’வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தநிலையில் ‘நியோகோவ்’ வைரஸ் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என்றும் அது பற்றி பயப்பட வேண்டாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். பொதுவாக விலங்குகளிடையே பரவும் ஒரு வைரஸ் மனிதர்களுக்கும் பரவ வேண்டுமென்றால் அதற்கு அந்த வைரஸ் உருமாற்றம் அடைய வேண்டும். தற்போதைய நிலையில் ‘நியோகோவ்’ வைரஸ் பற்றி பயப்பட தேவையில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர்.

இதனிடையே கடந்த 2 தினங்களாக நியோகோவ் வைரஸ் குறித்து ஏகப்பட்ட வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.நியோ கோவ் வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும், தற்போது பரவி வரும் புதிய வகை வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்றாலும், தடுப்பூசி செலுத்தி கொண்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார். 

தற்போது, நியோகோவ் வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் தேவையற்ற கருத்துகளை பகிர வேண்டாம் என்றும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, நியோகோவ் வகை கொரோனா  வெளவாலில் இருந்து வெளவாலுக்கு பரவக்கூடியது. நியோகோவ் கொரோனா தொடர்பாக தேவையற்ற கருத்துகளைப் பகிர வேண்டாம். தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பாதுகாப்பு என்பதை மக்கள் உணர வேண்டும். ஜனவரி 29 வரை கொரோனாவால் உயிரிழந்த 730 பேரில் 435 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

click me!