சிங்கப்பூர் நிகழ்ச்சி திடீர் ரத்து...ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் யுவன் ஷங்கர் ராஜா...

By Muthurama LingamFirst Published Jul 10, 2019, 6:50 PM IST
Highlights

சிங்கப்பூரில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி திடீரென ஒத்தி வைக்கப்பட்டதற்கு தனது வருத்ததையும் மன்னிப்பையும் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா. 
 

சிங்கப்பூரில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி திடீரென ஒத்தி வைக்கப்பட்டதற்கு தனது வருத்ததையும் மன்னிப்பையும் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா. 

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வரும் 13ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்தனர். ஆனால் திடீரென ஷோ ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் இது குறித்து தனது தனது வருத்தத்தை கூறியுள்ளார். 

இது குறித்து தனது தரப்பு விளக்கமாக அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள யுவன்  'ஆலோசிக்காமலேயே இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ரத்து செய்ததை அறிவித்தனர். இசை நிகழ்வுக்காக ஆடிட்டோரியங்களில் குவியும் ரசிகர்களுக்கான எனது அர்ப்பணிப்பு அப்படியே இருக்கிறது. தவிர்க்கவே முடியாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்லது இயற்கை பேரழிவு பாதிப்பு இன்றி, எந்தவொரு நிகழ்வையும் ஒத்திவைக்கும் யோசனையை நான் எந்த நிலையிலும் ஊக்குவிப்பதே இல்லை. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைப்பது குறித்து எங்களுக்கு அறிவிக்க எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் தேதிகள் வீணாகி இருக்கிறது. இந்த ரத்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கும், அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். பணத்தை விடவும் நேரம் என்பது மதிப்பு மிக்கது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்காக நான் வருந்துகிறேன். இந்த சம்பவம் எனக்கு ஒரு நிகழ்வை நடத்துவதற்கு "சரியான பங்குதாரரை தேர்ந்தெடுப்பது அவசியம்" என்ற பாடத்தை கற்பித்திருக்கிறது. மன்னிப்பு வழங்குவது மட்டுமல்ல, பார்வையாளர்கள் குறிப்பாக எனது ரசிகர்கள் எனது நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டு அவர்களின் நிபந்தனையற்ற அன்பை இப்பொழுது போலவே, என்றென்றும் தருவார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி அதே 13ஆம் தேதி நிகழும் பட்சத்தில் நான் கலந்து கொண்டு, இந்த நிகழ்வை நடத்திக் கொடுக்க தயாராக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

click me!