சமீபகாலமாக கோலிவுட் வட்டாரத்தை கலக்கிக்கொண்டிருப்பது சர்கார் திரைப்படம் தான்.
இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்கு திரைக்கு வந்திருக்கும் இந்த திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது என மக்கள் ஆதரவை ஒரு பக்கம் சம்பாதித்திருந்தாலும் , ஆளுங்கட்சியின் எதிர்ப்பையும் சராமாரியாக பெற்றிருக்கிறது சர்கார். கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரிலீசான மெர்சல் திரைப்படம் கூட இதே மாதிரி பாஜக வின் எதிர்ப்பை சம்பாதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல தான் இந்த முறை சர்கார் ஆளுங்கட்சியையே விமர்சித்து கடும் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது. இதனை தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் நேரடியாக எச்சரிக்கைவிடுத்ததை தொடர்ந்து, தற்போது இந்த படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன.
ஓவ்வொரு குடிமகனுக்கும் அவரது ஓட்டுரிமை மற்றும் அதன் முக்கியத்துவத்தினை உணர்த்தும்படியாக கதையை கொண்டுபோயிருக்கும் முருகதாஸ், இந்த படத்தில் தளபதி விஜய் வீராவேசமாக அரசை எதிர்க்கும் காட்சிகளில் மிரட்டலான வசங்களை எல்லாம் இடம் பெற செய்திருந்தார். திரையில் ஒரு வீராதி வீரனாகவே ஹீரோக்களை பார்த்துவிட்டு, இது போல யதார்த்தமான பிரச்சனை என்று வரும் போது அவர்கள் எந்த குரலும் எழுப்பாமல் அமைதி காப்பது மக்களுக்கு கடும் அதிருப்தியையே ஏற்படுத்தி இருக்கிறது.
அதிலும் சர்கார் படத்தில் அரசாங்கத்தையே எதிர்க்கும் விஜய் , தற்போது சர்கார் படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு கிளம்பிய போதும் கூட அமைதி காத்திருப்பதை வெகுவாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். விஜயின் அமைதி அவரது ரசிகர்களுக்கும் கூட ஒரு பக்கம் வருத்தத்தை அளித்திருக்கிறது தான் ஆனாலும் தங்கள் தளபதிக்காகக அவர்களும் அமைதியாகி இருக்கின்றனர்.
சர்கார் பட பேனர்கள் கிழிக்கப்பட்டது, ரசிகர்கள் தாக்கப்பட்டது என தொடர்ந்து சர்கார் படம் சந்தித்த பிரச்சனைகளின் போதெல்லாம் ரஜினி, கமல் ,விஷால் போன்றோர் தான் கருத்து தெரிவித்திருந்தனர். விஜய் வாயையே திறக்கவில்லை. படத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கும் ”ஒரு விரல் புரட்சி நாயகன்” இங்கு மட்டும் ஏன் உம்முனு கம்முனு இருக்கிறார்? என விஜய்-ன் இந்த அமைதிக்கு எதிராக, தொடர்ந்து கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.