நடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை... விலகிய நீதிபதிகள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 24, 2020, 7:36 PM IST
Highlights

இன்று மீண்டும் விசாரணைக்கு இந்த வழக்கு விசாரணை வந்தபோது, மறு தேர்தல் நடத்துவதா? அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா? என்பது குறித்து இரு தரப்பும் மாற்றுக் கருத்துக்களை தெரிவித்தனர். 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சங்க உறுப்பினர்கள் பலரை நீக்கியது தொடர்பாகவும், தபால் வாக்குகள் அளிக்கப்படாதது குறித்தும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.  அதுமட்டுமின்றி புதிய தேர்தலை நடத்தி முடிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் என்பவரை நியமித்த நீதிமன்றம், 3 மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். கடைசியாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டிருந்தனர். கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு,  நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா? வாக்கு எண்ணிக்கை நடத்துவதா? என்பதை நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர் தரப்பினர் இன்று பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். 

ஆனால் கடந்த முறை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு ரூ.30 லட்சம் செலவிடப்பட்டுள்ள நிலையில் மறு தேர்தல் நடத்த சாத்தியமில்லை எனவும் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த சட்ட போராட்டம் மூலம் இருதரப்பு என்ன செய்யப் போகிறீர்கள் என கருத்து தெரிவித்திருந்தனர். 

இன்று மீண்டும் விசாரணைக்கு இந்த வழக்கு விசாரணை வந்தபோது, மறு தேர்தல் நடத்துவதா? அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா? என்பது குறித்து இரு தரப்பும் மாற்றுக் கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து வழக்கில் இருந்து விலகினர். 
 

click me!