நடிகர் விவேக் ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி சமூக அக்கறையோடு பல்வேறு நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கலாம் என்ற பெயரில் நாளைய சமூகத்தினரின் பாதுகாப்புக்கருதி மரங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியும் வருகிறார்.
இவர் நடிக்கும் படங்களில் காமெடியுடன், இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் புரியும் வகையில் கருத்துக்களை கூறியவர். இதன் காரணமாகவே இவரின் காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது வெளிநாடுகள் மற்றும் இன்று, இந்தியா வரை எட்டி பார்த்திருக்கும் ஒரு விளையாட்டு தான் "ப்ளூ வேல்" . இந்த விளையாட்டை இந்தியாவில் சிலர் விளையாடி தற்கொலை செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியது. அதே போல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூட சில தினங்களுக்கு முன் அவருடைய நண்பர் ஒருவர் இந்த விளையாட்டை விளையாடி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இப்படி பெருகிக்கொண்டே போகும் தற்கொலைகள் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நடிகர் விவேக் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவரு கூறுகையில்..." உடல், அற்புதம்; உயிர்,அதிசயம்; வாழ்வோ,வரம்!- இதன் அருமை அறியாமல் தற்கொலை (ப்ளூ வேல்) செய்தல் முட்டாள்தனம்! இதை அனுமதித்தல் பொறுப்பற்ற தனம் என பதிவிட்டுள்ளார்". இவரின் இந்த கருத்துக்கு பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.