“சூரியின் பொய்யான குற்றச்சாட்டு வருத்தமளிக்கிறது”... நில மோசடி புகார் குறித்து விஷ்ணு விஷால் விளக்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Oct 9, 2020, 2:01 PM IST
Highlights

அதில் முன்னாள் தீயணைப்புத்துறை டி.ஜி.பியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. 

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் காமெடி நடிகர் சூரி தனது முதல் பட ஹீரோவான விஷ்ணு விஷால் தந்தை மீது அளித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைச்சுவை நடிகர் சூரி சமீபத்தில் சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். அதில் தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 2.70 கோடி மோசடி நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

அதில் முன்னாள் தீயணைப்புத்துறை டி.ஜி.பியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். சம்பள பாக்கியை தர மறுத்த நிலையில் நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அடையார் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதை முற்றிலும் மறுத்துள்ள விஷ்ணு விஷால் தனது தரப்பு விளக்கம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது உண்மையில் திரு. சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோவுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தர வேண்டும். “கவரிமான் பரம்பரை” என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம். உண்மை வரும் வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உண்மையான தகவல்களுடன் இது பற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

click me!