நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களில் தானும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து தேர்தலில் நிற்க மனு தாக்கல் செய்த அவருக்கு ஒரு சில நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் ஏற்கெனவே நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராகவும் இருக்கும் விஷால் சங்க விதிப் படி அரசியலில் போட்டியிடக் கூடாது என பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின..
ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளையும் விஷால் சமாளித்தாலும், அவரே எதிர்பார்க்காத ட்விஸ்ட் விஷால் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், மக்களுக்காக தான் இந்தத் தேர்தலில் போட்டியிட நினைத்தேன், அது முடியாமல் போனது. என்னால் இந்தத் தொகுதியில் போட்டியிட முடியவில்லை என்றாலும்... இந்தத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு உதவி அவரை வெற்றி பெற வைப்பேன் எனத் தெரிவித்தார்.
ஒரு வேளை அவர் அப்படி சொன்னது தினகரனைத் தானோ..? இப்படி ஒரு சந்தேகம் எழக் காரணம் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் இருவருக்கும் நடந்த சந்திப்பு தான். எப்படியோ தற்போது தினகரன் வெற்றி பெற்றுவிட்டார்.
ஆனால் விஷால் வீர வசனம் மட்டும் பேசிவிட்டுக் காணாமல் போய் விட்டார். அவர் எந்த சுயேச்சை வேட்பாளருக்கு உதவினார் என அவர்தான் கூறவேண்டும்.