"யாதும் ஊரே யாவரும் கேளிர்".... மக்கள் செல்வனுடன் முதன்முறையாக இணைந்த பிரபல காமெடி நடிகர்...! யார் தெரியுமா?

By Selvanayagam PFirst Published Nov 17, 2019, 12:11 AM IST
Highlights

 'சங்கத்தமிழன்' படத்தில் மாஸ் காட்டியுள்ள மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் நடிப்பில், 'கடைசி விவசாயி', 'மாமனிதன்', 'லாபம்', 'க/பெ. ரணசிங்கம்' என அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. 
 

அதுமட்டுமல்லாமல், விஜய்யின் 'தளபதி-64' படம், தெலுங்கில் அல்லு அர்ஜுனின் 20 படம் ஆகியவற்றில் நாயகர்களுக்கு எதிராக வில்லத்தனமும் காட்டவுள்ளார். 
இப்படி, ஹீரோ, வில்லன் என மாறிமாறி நடித்துவரும் விஜய்சேதுபதி, அறிமுக இயக்குநர் வெங்கடகிருஷ்ணா ரோஹந்த்தின் இயக்கத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். 

இது, அவர் நடிக்கும் 33-வது படமாகும். இந்தப் படத்துக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். கனிகா, ரித்விகா, சிவரஞ்சனி உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். பிரபல இயக்குநர் மகிழ்திருமேணி, இந்தப் படத்தில் வில்லனாக அவதாரம் எடுக்கிறார்.

மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறார்.  நிவாஸ் கே பிரச்சன்னா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் கலைவாணர் விவேக்கும் இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் விஜய்சேதுபதியுடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகி, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. விஜய் சேதுபதியுடன் விவேக் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை ஆகிய கொண்டாட்டங்களை உள்ளடக்கிய கதையுடன் இந்தப்படம் உருவாகிறது. இதில், இசைக்கலைஞர் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். முதல்முறையாக விஜய்சேதுபதி - விவேக் காம்போவில் உருவாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!