ஆப்பா? அதிரடியா?... இன்னைக்கு தெரிஞ்சிடும்... எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் விஜய் ரசிகர்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 19, 2021, 10:50 AM IST
Highlights



வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி வழக்கில் அபராதம் விதித்தை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.இதையடுத்து,  காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை  விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார். 

மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா  நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் விலக்கு கோரியதாகவும், இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மதிப்புக்கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு செல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது என்பதாலும் விலக்கு கேட்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் விஜய் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.. தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல், இந்த மேல்முறையீட்டு மனுவை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரியும் விஜய் தரப்பில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வில், வரும் இன்று 8வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

விஜய் பற்றி நீதிபதியின் விமர்சனங்களுக்கு எதிர் கருத்து தெரிவித்து தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் கொந்தளித்து வருகின்றனர். விஜய் தன்னுடைய உரிமையை தான் கேட்டார் அதற்கு ஏன் இப்படி கடுமையான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமென அரசியல் கட்சியினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இதுகுறித்து விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மேல்முறையீட்டு வழக்கு விஜய் தரப்பிற்கு சாதகமாக அமையுமா?, பாதகமாக முடியுமா? என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

click me!