“நிச்சயம் நீதி வெல்லும்”... சுஷாந்த் காதலி ரியா சக்ரபர்த்தி கண்ணீருடன் உருக்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 31, 2020, 8:12 PM IST
Highlights

இதையடுத்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள ரியா, என்னுடைய வழக்கறிஞர்களின் ஆலோசனையின் பேரில் இனி சுஷாந்த் மற்றும் என் மீதான வழக்கு தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கப்போவதில்லை.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்  ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்தின் அதிர்ச்சி மரணம் பாலிவுட்டில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவருடைய வீட்டில் இருந்து எவ்வித தற்கொலை கடிதமும் சிக்காதது ரசிகர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தேகத்தை ஆழ்த்தியுள்ளது. 


இந்நிலையில் நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அந்த புகாரில் ரியா தன் மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி வரை மாற்றியுள்ளதாகவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி சுஷாந்தின் மன அழுத்த பிரச்சனையை வெளியில் சொல்லிவிடுவேன் எனக்கூறி அவரை மிரட்டியதாகவும், அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வைத்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

இந்நிலையில் பாட்னா போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பையில் விசாரிக்க உத்தரவிடக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் சுஷாந்த் சிங் ராஜ்புட் உடன் தான் ஓராண்டுகளாக லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும், கடந்த மாதம் ஜூன் 8ம் தேதி வரை ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தனக்கும் கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார். 

இதையடுத்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள ரியா, என்னுடைய வழக்கறிஞர்களின் ஆலோசனையின் பேரில் இனி சுஷாந்த் மற்றும் என் மீதான வழக்கு தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கப்போவதில்லை. நம் நாட்டின் நீதி மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உள்ளது. நீதி வெல்லும் என் கண்ணீருடன் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

click me!