விமர்சனம் ‘காப்பான்’...சூர்யாவை அர்ஜூன், விஜயகாந்தாக மாற்றிய கே.வி.ஆனந்த்...

By Muthurama LingamFirst Published Sep 20, 2019, 5:17 PM IST
Highlights

பிரதமர் பதவியில் இருந்தாலே அவருக்கு ஆபத்துகள் வரத்தானே செய்யும். அப்படி ஆபத்துகள் வரும்போது ஹீரோதானே காப்பாற்ற வேண்டும். எல்லாம் நம் விருப்பபடியே நடக்கிறது. ஆனால் ரெண்டரை மணி நேரத்துக்கு ஜல்லி அடிக்கவேண்டுமே. அதனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பிரதமர் மோகன்லால் கொல்லப்பட, அவரது மகன் ஆர்யா நாட்டின் பிரதமராகிறார். அந்த ஆர்யாவுக்கும் தீவிரவாதிகளால் ஆபத்து இருக்க, அவரது மனைவி ஆயிஷாவைத் தீவிரமாகக் காதலிக்கும் சூர்யா தீவிரவாதிகளைக் கொன்று நாட்டின் நலன் காக்கிறார்.

'அயன்’என்ற வெற்றிப்படத்துக்கும்  ’மாற்றான்’என்ற படுதோல்விப்படத்துக்கும் பின்னர் சூர்யாவும் இயக்குனர் கே.வி. ஆனந்தும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது. தெலங்கான கவர்னர் தமிழிசையின் வார்த்தைகளைக் கடன் வாங்கிச் சொல்வதானால் இது வெற்றிகரமான தோல்விப்படம்.

கிராமத்தில் வசிக்கும் கதிர் (சூர்யா) ஒர் ஆர்கானிக் விவசாயி. அடடே அவ்வளவு சமூக அக்கறையா என்று புல்லரிப்படைய வேண்டாம். சில காட்சிகளே அவர் விவசாயம் செய்கிறார். ஆனால், உண்மையில் அவர் ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். அவர் பிறகு இந்தியப் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையில் இணைகிறார். பிரதமர் பதவியில் இருந்தாலே அவருக்கு ஆபத்துகள் வரத்தானே செய்யும். அப்படி ஆபத்துகள் வரும்போது ஹீரோதானே காப்பாற்ற வேண்டும். எல்லாம் நம் விருப்பபடியே நடக்கிறது. ஆனால் ரெண்டரை மணி நேரத்துக்கு ஜல்லி அடிக்கவேண்டுமே. அதனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பிரதமர் மோகன்லால் கொல்லப்பட, அவரது மகன் ஆர்யா நாட்டின் பிரதமராகிறார். அந்த ஆர்யாவுக்கும் தீவிரவாதிகளால் ஆபத்து இருக்க, அவரது மனைவி ஆயிஷாவைத் தீவிரமாகக் காதலிக்கும் சூர்யா தீவிரவாதிகளைக் கொன்று நாட்டின் நலன் காக்கிறார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த சரத்,விஜயகாந்த், அர்ஜூன் படக் கதைபோல இருக்கிறதே என்ற ஐயம் வருகிறதா? ஐயத்துக்கெல்லாம் இடமே இல்லை அதேதான். விஜயகாந்த் காலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்து பல அட்டகாசங்களைச் செய்துகொண்டிருந்தனர்.அவர்களை நாடு புகுந்து விளாசினார் விஜயகாந்த்.  பிறகு அர்ஜுன் கொஞ்ச நாள் பயங்கரவாதிகளோடு பயங்கரமாக  மோதிக்கொண்டு தேசபக்தியை வளர்த்தார். இப்போது அந்தப் பொறுப்பு  நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யாவின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மட்டும் போதாது உள்ளூர் வில்லர் ஒருவரும் இருந்தால் இன்னும் கொஞ்சம் பெப்பாக இருக்குமே என்று நினைத்த கே.வி.ஆனந்த், இந்தியாவைச்சேர்ந்த கார்ப்பரேட் கிரிமினல் ஒருவரை வில்லனாகக் கொண்டுவந்து நிறுத்துக்கிறார்.அதாவது மோடியையும் விமர்சிக்கிறாராம். ஏனோ அது மழையில் நனைந்த பட்டாசு போல் பல்லிழிக்கிறது. இதற்கு நடுவில்  அங்கங்கே ‘மானே தேனே’ போட்டுக்கொள்வதுபோல் இயற்கை விவசாயம், தஞ்சை டெல்டாவில் மீத்தேன் போராட்டம், பூச்சிகளை வைத்து உயிரியல் யுத்தம் என பல விஷயங்களைச் சொல்லி கிச்சுக்கிச்சு மூட்டுகிறார் ஆனந்த்.

முந்தைய படங்களில் சற்று சோர்வாகத் தெரிந்த சூர்யா இந்தப் படத்தில் மீண்டும் விறுவிறுப்பு மோடுக்கு மாற முயற்சித்திருக்கிறார். ஆயிஷாவுக்கு சூர்யாவை சுற்றி வருவதைத் தவிர ஒரு வேலையுமில்லை.இன்னும் ஏழெட்டு வருடங்களுக்கு மோகன்லால் தமிழ் சினிமா பக்கம் எட்டிப்பார்க்கமாட்டார். ஆர்யா, சத்தியமா உங்க போர்சனெல்லாம் பயங்கர போர்யா. டைட்டிலில் இசையமைப்பாளர் என்று ஹாரிஸ் ஜெயராஜின் பெயர் வந்ததைத் தாண்டி சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.

‘கனாக் கண்டேன்’,’அயன்’,’கோ’ஆகிய மூன்று சொல்லிக்கொள்ளும்படியான படங்களுக்குப் பின்னர்,’மாற்றான்’,’அநேகன்’,’கவண்’ஆகிய மூன்று சொதப்பல் படங்களைக் கொடுத்திருக்கும் கே.வி.ஆனந்துக்கு ‘காப்பான்’மூலம் தோல்விப்படங்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. இனி கொஞ்ச காலத்துக்கு அவரவர் வேலையை அவரவர் செய்யவேண்டும்  ‘பிகில்’விஜய் சொல்வதுபோல ஒழுங்காக ஒளிப்பதிவாளர் வேலையை மட்டும் தொடரலாம்.
 

click me!