திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! வாழவைக்கும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி மெசேஜ்

By karthikeyan VFirst Published Aug 9, 2020, 9:58 PM IST
Highlights

திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த தனக்கு வாழ்த்து தெரிவித்த நல் உள்ளங்களுக்கும் வாழவைக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
 

திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த தனக்கு வாழ்த்து தெரிவித்த நல் உள்ளங்களுக்கும் வாழவைக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கருத்த நிறம், கம்பீரமான தோற்றம், அடர்த்தியான கோரை முடி என பார்த்தவுடன் கவரும் தோற்றத்தில், கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில், ஒரு கேட்டை திறந்துகொண்டு தமிழ் திரையுலகில் நுழைந்தார் ரஜினிகாந்த். அதன்பின்னர், சின்ன சின்ன சில ரோல்கள் செய்து, பிறகு வில்லன், கதாநாயகன் என படிப்படியாக வளர்ந்து இன்று உலகம் முழுதும் அறியப்படக்கூடிய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார் ரஜினிகாந்த்.

1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியானது. அதன்பின்னர், மூன்று முடிச்சு, தப்பு தாளங்கள், எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் உள்ளிட்ட பல அடர்த்தியான கதையம்சங்கள் கொண்ட திரைப்படங்களில், நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து, அந்த கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்து பெயர் பெற்றார் ரஜினிகாந்த்.

நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்துவந்த ரஜினிகாந்த், ஒரு கட்டத்திற்கு பின்னர், முழுக்க முழுக்க கமெர்சியல் படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்து பெற்று, அதன்பின்னர் சூப்பர் ஸ்டாராக உருவானார். 1990களில் அண்ணாமலை, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா என தொடர்ச்சியாக மெகா ஹிட் படங்களை கொடுத்து புகழின் உச்சிக்கு சென்றதுடன், பாக்ஸ் ஆஃபிஸ் மன்னனாகவும் திகழ்கிறார். ஷங்கரின் எந்திரன், 2.0 ஆகிய படங்களில் நடித்த பின்னர், ரஜினிகாந்தின் லெவல் மேலும் உயர்ந்து சர்வதேச அளவில் உயர்ந்துவிட்டார்.

இன்றைக்கு புகழின் உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த், திரையுலகில் அடிவைத்து 45 ஆண்டுகள் ஆகின்றன. 45 ஆண்டுகள் திரையுலகில் இருக்கும் ரஜினிகாந்துக்கு வயது 69. ஆனால் இந்த வயதிலும், தான் சார்ந்த சினிமா துறையில் தன்னை நம்பர் 1-ஆக நிலைநிறுத்திக்கொண்டுள்ள ரஜினிகாந்தின் சாதனை அபாரமானது. 

ரஜினிகாந்த் அவரது திரையுலக வாழ்க்கையில் 45 ஆண்டுகளை முடித்துள்ள நிலையில், திரையுலகை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி ஒரு டுவீட் செய்துள்ளார் ரஜினிகாந்த். அந்த டுவீட்டில், என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
 

என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻 🤘🏻

— Rajinikanth (@rajinikanth)
click me!