#BREAKING வரி செலுத்தினார் ரஜினிகாந்த்... முடிவுக்கு வந்தது ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Oct 15, 2020, 1:10 PM IST
Highlights

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவையில் இருந்த 6 லட்சத்து 56 ரூபாயை நடிகர் ரஜினிகாந்த் சற்று முன் செலுத்தியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரையிலான சொத்து வரி செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதையடுத்து ரூ.6.50 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டி உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் ராகவேந்திரா மண்டபத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், மார்ச் 24 ம் தேதி முதல் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாததால் எந்த வருமானமும் இல்லை எனவே சொத்து வரி கேட்டு நிர்பந்திக்ககூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் சென்னை மாநகராட்சிக்கு கடந்த 23ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியும் இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா, நோட்டீஸ் அனுப்பப்பட்டு 10 நாட்களில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்கள்... ஏன் அவசர அவசரமாக நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள். அத்துடன் இதற்கு மேலும் இப்படி நடந்து கொண்டால் அபராதம் விதிக்க நேரிடும் என்றும்  எச்சரிக்கை விடுத்தார்.  இதனையடுத்து ரஜினிகாந்த் தரப்பில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ரஜினிகாந்த் தரப்பு மனுவை திரும்ப பெறுவதாக ஒப்புக்கொண்டதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவையில் இருந்த 6 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை நடிகர் ரஜினிகாந்த் சற்று முன் செலுத்தியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொத்து வரி செலுத்த விலக்கு கேட்ட விவகாரம் சோசியல் மீடியாவில்  மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறிய நிலையில், தற்போது அவர் வரி செலுத்திய ரசீது வைரலாகி வருகிறது. இதில் உரிய நேரத்தில் வரி செலுத்தாதற்கான அபராதமாக ரூ9,386 செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!