ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, நடிகர் அஜீத்துடன் ”என்னை அறிந்தால்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 அப்பாவி பொதுமக்களில், இவரது தங்கையின் கணவர் ஜெயராஜும் ஒருவர்.
வீட்டில் மகளின் சடங்கு நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது, பத்திரிக்கை அளிக்க வெளியே சென்றிருந்தார் ஜெயராஜ். அப்போது நடந்த கலவரத்தை பார்த்து கொண்டிருந்த அவர், துப்பாக்கி சூட்டிற்கு பரிதாபமாக பலியாகி இருக்கிறார். இதனால் அவரது குடும்பம் மிகுந்த துயரில் ஆழ்ந்தது.
நேற்று முன் தினம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினரை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் விஜய். அவர் சில்வா மாஸ்டரின் தங்கை வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறி இருக்கிறார். மக்களில் ஒருவராக எளிமையுடன் விஜய் நடந்துகொண்ட விதத்தை, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் துக்கத்தை தன் துக்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டு என் தங்கைக்கு மனமாற ஆறுதல் அளித்துச்சென்ற அன்பு அண்ணன் இளையதளபதி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏
— silva stunt (@silvastunt)
சில்வா மாஸ்டரும் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பின் வரும் டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார். ”எங்கள் வீட்டிற்கு வந்து, எங்களின் துக்கத்தை தன் துக்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டு, என் தங்கைக்கு மனமாற ஆறுதல் அளித்துச்சென்ற, அன்பு அண்ணன் இளையதளபதி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி” என அப்பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார்.