இதுக்குத்தான் செல்போனைத் தட்டி விட்டேன் !! நடிகர் சிவகுமார் புது விளக்கம் !!

By Selvanayagam PFirst Published Oct 29, 2018, 10:56 PM IST
Highlights

என் அனுமதி இல்லாமல், அடுத்தவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில் செல்பி எடுத்தால்தான் நான் செல்போனைத் தட்டிவிட்டேன் என நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் கருத்தரிப்பு மைய திறப்புவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நடிகர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் சிவக்குமாரை காண்பதற்காக கூடியிருந்தனர். ரிப்பன் வெட்டி திறந்து வைக்க சிவக்குமார் வந்த போது ஒரு இளைஞர் செல்பி எடுக்க முயன்றார். அப்போது இளைஞரின் செல்போனை ஆவேசமாக தட்டி விட்டார் சிவக்குமார். சிவகுமாரின் இந்த செயல் தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி  ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் சிவகுமார் தான் ஏன் செல்போனைத் தட்டிவிட்டேன் என்பது குறித்து விளக்கமளித்தார்.

 

அதில் செல்ஃபி எடுப்பது என்பது நீங்கள், உங்கள் குடும்பம் கொடைக்கானல் லேக், ஊட்டி தொட்டபெட்டா போய் அதை கம்போஸ் செய்து எடுக்கும் விவகாரம். அது பர்சனல் சமாச்சாரம். அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஒரு பொது இடத்தில் ஒரு 200, 300 பேர் கலந்துகொள்ளும் விழாவுக்குப் போகும்போது காரிலிருந்து இறங்கி மண்டபத்துக்கு போகும் முன்பு பாதுகாப்புக்குச் செல்லும் ஆட்களைக்கூட ஓரம் தள்ளிவிட்டு ஒரு 25 பேர் செல்போனைக் கையில் வைத்துக் கொண்டு செல்ஃபி எடுக்கிறேன் சார் என்று நடக்கவே விடாமல் செய்வது எப்படி நியாயமாக இருக்கும்? என கேள்வி எழுப்பினார்.

உங்களைப் படம் எடுக்கிறேன் சார் என்று ஒரு வார்த்தை கேட்கமாட்டீர்களா? விஐபி என்பவன் நாம சொன்னபடி கேக்கணும், நில்லுனா நிக்கணும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்? எத்தனையோ ஆயிரம் பேருடன் ஏர்போர்ட்டிலும் திருமண விழாக்களிலும் செல்போனில் போஸ் கொடுத்திருக்கிறேன். உங்களுக்குத் தெரியுமா?.

நான் புத்தன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. நானும் மனிதன்தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையில் ஹீரோதான். அதே சமயம் அடுத்தவர்களை எந்த அளவுக்கு நாம் துன்புறுத்துகிறோம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும் என சிவகுமார் தெரிவித்துள்ளார்.

click me!