மாநாடு படம் வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ஜப்பானில் மாநாடு படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறதாம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கியது முதல் பல்வேறு பிரச்சனைகளையும், தடைகளையும் சந்தித்து வந்த இப்படம் ரிலீஸ் சமயத்தில் எதிர்கொண்ட பிரச்சனை ஏராளம்.
அத்தனை தடைகளையும் தாண்டி வெளியான இப்படம் தற்போது தமிழகமெங்கும் வசூல் வேட்டை ஆடி வருகிறது. முதல் இரண்டு நாட்களிலேயே இப்படம் 14 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மாநாடு படத்தை சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த், வெங்கட் பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்பட படக்குழுவினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார். அதேபோல் சிவகார்த்திகேயன், அனிருத், ஹரிஷ் கல்யாண், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்களும் மாநாடு படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர்.
இந்நிலையில், மாநாடு படம் வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ஜப்பானில் மாநாடு படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறதாம். ஜப்பானிய பெண் ஒருவர் மாநாடு படம் குறித்து பேசும் வீடியோவை நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுவரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கு அமோக வரவேற்பு அளித்து வந்த ஜப்பானிய மக்கள், தற்போது லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவின் மாநாடு படத்தை கொண்டாடி வருவது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.