சிம்புவின் தாயாரான உஷா டி.ராஜேந்தர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சிம்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். சிம்புவின் தாயாரான உஷா டி.ராஜேந்தர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் கெளரவ ஆலோசகராக சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த அறிக்கையில், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தலாமா என நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நேரத்தில், தாமாக முன்வந்து ஒரு படத்தில் நடித்து கொடுப்பதாக அறிவித்த நமது சங்க உறுப்பினர் திரு. சிலம்பரசன் TR அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த படத்தின் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ உதவி, வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
சங்க வளர்ச்சிக்காகவும் தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் உருவாக்கப்படும் இந்த படத்தை சங்கத்தின் துணைத்தலைவர் திரு சிங்காரவேலன் மிகுந்த பொருட்செலவில் தயாரிப்பார் என்பதையும், " வானம் " படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி புகழ்பெற்ற திரு.ஞானகிரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவார் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவக்கப்பட்டு இந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்பதையும் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.