selvaraghavan : விஜய்யின் ‘பீஸ்ட்’டை தொடர்ந்து சர்ச்சைக்குரிய இயக்குனருடன் கூட்டணி... உறுதிசெய்த செல்வராகவன்

By Ganesh PerumalFirst Published Dec 4, 2021, 8:19 PM IST
Highlights

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தில் நடித்து முடித்துள்ள செல்வராகவன், அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தனி மவுசு என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் இதுவரை காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் பணியாற்றி உள்ளனர்.

அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்திலும் தனுஷ் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுதவிர இவர்கள் இருவரும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

இவ்வாறு பிசியான இயக்குனராக வலம் வரும் செல்வராகவன், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் செல்வராகவன், அதன்படி அவர் நடிக்க உள்ள புதிய படத்தை மோகன் ஜி இயக்க உள்ளார். இவர் திரெளபதி, ருத்ர தாண்டவம் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் ஆவார். மேலும் இப்படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். 

ஜி.எம்.பிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

click me!