மதுரையைத் தொடர்ந்து திருச்சி கோவை உள்ளிட்ட பல நகரங்களில் ‘சர்கார்’ படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள தியேட்டர்களை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரையைத் தொடர்ந்து திருச்சி கோவை உள்ளிட்ட பல நகரங்களில் ‘சர்கார்’ படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள தியேட்டர்களை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக பலத்த போலிஸ் பாதுகாப்புகளும் தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்போராட்டங்களின் போது தியேட்டர்களில் இருக்கும் விஜய் பேனர்களைக் கிழித்து ‘துரோகி விஜய் ஒழிக. இயக்குநர் முருகதாஸை கைது செய்க’ என்ற கோஷங்களும் எழுப்பபடுகின்றன.
இரு தினங்களாகவே அ.தி.மு.க.வின் பெரும்பாலான அமைச்சர்கள் ‘சர்கார்’ படம் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அத்தனை பேர் குரலிலும் ஒற்றுமையாக இருக்கும் விஷயங்கள் இவைதான்.
1. விஜய் ஒரு சந்தர்ப்பவாதி. பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவில் கொள்கையற்று அரசியல் பேசுகிறார்.
2. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சன்.டி.வி.மற்றும் தி.மு.க.வின் சூழ்ச்சிக்கு பலியாகி ஜெயலலிதாவின் பெயரை களங்கப்படுத்தியிருக்கிறார்.
3. இலவசங்கள் மக்களுக்கு இன்றியமையாதவை. அவற்றை எரிக்கும் காட்சிகளை படத்தில் வைத்ததன் மூலம் முருகதாஸ் மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டியிருக்கிறார்.
4. படத்தைத் தயாரித்தவர்கள், நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் உட்பட அனைவரும் கோழைகள். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவர்களுக்கு இப்படத்தை தயாரிக்கும் துணிச்சல் இருந்திருக்குமா?
அமைச்சர்களின் குரல்கள் மேலும் மேலும் அதிகரித்து வந்த நிலையில் இன்று மதுரையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் நடந்த தியேட்டர் முற்றுகைப் போராட்டத்தால் சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியா தியேட்டர்களின் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது இதே வகையன போராட்டங்கள் கோவை, திருச்சி உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் பரவிவரும் நிலையில் எந்த நேரத்திலும் தமிழகம் முழுமைக்குமான காட்சிகள் ரத்தானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.