காதல் ஜோடி ரன்வீர் சிங் – தீபிகா திருமணம்…. இத்தாலியில் பலத்த பாதுகாப்புடன் நடந்தது !!

By Selvanayagam PFirst Published Nov 15, 2018, 9:57 AM IST
Highlights

பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இயற்கை எழில் சூழ்ந்த கோமோ ஏரி மாளிகையில் கொங்கனி முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனும் நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். எனினும் இதை வெளியே சொல்லாமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் தீபிகா படுகோனேவும், ரன்வீர்சிங்கும் தங்கள் திருமண தேதியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

அதில் எங்கள் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15–ந் தேதிகளில் இத்தாலியில் நடக்கிறது. எங்கள் வாழ்க்கை அன்பாகவும் ஒற்றுமையாகவும் செல்ல உங்கள் ஆசியை வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இதையடுத்து கடந்த 2 வாரமாக திருமண ஏற்பாடுகள் நடந்தன. இத்தாலியில் லோக் கோமா பகுதியில் உள்ள காஸ்டாதிவா ரிசார்ட் மற்றும் வில்லா தி எஸ்ட் ஆகிய இடங்களில் திருமண சடங்குகளை நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக தீபீகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் 2 தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து இத்தாலி புறப்பட்டு சென்றனர். 

இந்நிலையில் ரன்வீர் – தீபிகா திருமணம் இத்தாலியில் பிரபல லோக் கோமோ ஏரியில் உள்ள மாளிகையில் நடைபெற்றது. கொங்கனி பாரம்பரிய முறைப்படி  நேற்று காலை 7 மணிக்கு இவர்களின் திருமணம் நடைபெற்றது. இன்று சிந்தி முறைப்படி மீண்டும் திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருமணத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உலக தலைவர்கள் வரும்போது அளிக்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.  

திருமணத்துக்கு வந்தவர்களின் செல்போன்களில் கேமராவை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தனர். திருமணம் நடக்கும் இடம் ஏரி ஓரத்தில் இருப்பதால் படகில் பாதுகாப்புக்கு ஆட்களை நிறுத்தி உள்ளனர். திருமணத்துக்கு 100 பேர் மும்பையில் இருந்து சென்றுள்ளனர். திருமண பரிசுகளை அறக்கட்டளைக்கு அளிப்பதாக இருவரும் அறிவித்து உள்ளனர்.

இத்தாலியில் ஆடம்பர திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூருவில் வரும் 21-ம் தேதியும் மும்பையில் வரும் 28-ம் தேதியும் நடைபெற உள்ளது.

click me!