பிரச்சாரத்துக்கு அழைக்காத ஓபிஎஸ், ஈபிஎஸ்...டிடிவி தினகரன் அணிக்குத் தாவப்போகும் பசு நேசன் ராமராஜன்...

By Muthurama LingamFirst Published Apr 7, 2019, 11:36 AM IST
Highlights

முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவருமே தன்னை தேர்தல் பிரச்சாரங்களுக்கு அழைக்காமல் திட்டமிட்டுப் புறக்கணித்ததால் மனச்சோர்வாலும், உடல்நலம் குன்றியும் நடிகர் ராமராஜன் வீட்டில் முடங்கியுள்ளதாக ஒரு பகீர் தகவல் நடமாடுகிறது.

முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவருமே தன்னை தேர்தல் பிரச்சாரங்களுக்கு அழைக்காமல் திட்டமிட்டுப் புறக்கணித்ததால் மனச்சோர்வாலும், உடல்நலம் குன்றியும் நடிகர் ராமராஜன் வீட்டில் முடங்கியுள்ளதாக ஒரு பகீர் தகவல் நடமாடுகிறது.

‘கரகாட்டக்காரன்’,’எங்க ஊரு பாட்டுக்காரன்’ கால கட்டங்களில் ரஜினி, கமலை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்த ராமராஜன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராகவும் இருந்ததால் நல்ல மார்க்கெட்டுடன் இருந்தபோதே அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ஜெயலலிதாவின் விசுவாசியான இவர், சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரு சேர கவனம் செலுத்த முடியாததால் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவில் சறுக்கினார். ஆனாலும் ஜெயலலிதா, அவரை அரவணைத்து 1998 மக்களவைத்தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். அங்கு வெற்றிபெற்று மக்களவைக்கும் சென்றார். மக்களவையில் ஒரு முறை விவாதம் நடந்தபோது மைய மண்டபத்துக்குச் சென்று ‘அம்மா வாழ்க, அம்மா வாழ்க’ என்று முழக்கமிட்டு வடமாநில எம்பிகளையே திகைக்க வைத்தார். அதனால், ஜெயலலிதாவுக்கு ராமராஜன் மீது எப்போதுமே தனிப்பாசம் உண்டு.

ஒரு முறை உடல் நலகுறைவாலும் வறுமையாலும் ராமராஜன் வாடியபோது, ஜெயலலிதா அவரது முழு மருத்துவமனைச் செலவையும் ஏற்றார். மேலும், அவரது நிரந்தர வருவாய்க்கு ராமராஜனை பொதுக்கூட்டங்களுக்கு அழைக்கும்படி கட்சியினருக்கு உத்தரவிட்டார். அந்தளவுக்கு அதிமுகவில் ராமராஜன் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தார். அதற்குப் பிராயச்சித்தமாக நடிகர் ராமராஜன் தேர்தல் நேரத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்வார்.

தேர்தல் இல்லாத நேரத்தில், அதிமுக பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடிகர் ராமராஜன் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடன் சேர்ந்தார். ஆனால், அவர்கள் ராமராஜனை கவுரவமாக நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார்.

இந்நிலையில் பழைய கடன்களுக்கு வட்டி கட்டியே வறுமை நிலையில் வாடிக்கொண்டிருக்கும் ராமராஜன் இரண்டு முக்கியத் தேர்தல்கள் நடைபெறுவதால் அதிமுகவில் தன்னை பிரச்சாரத்துக்கு அழைப்பார்கள் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருந்ததாகவும், அதற்காகக் கிடைக்கும் பணத்தில் சிறிய அளவில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு பின்னர் பிரச்சாரத்தில் ஈடுபட விரும்பியதாகவும் தெரிகிறது.

ஆனால் உடல் நலம் குன்றியிருக்கும் ராமராஜனுக்கு உதவ மனமில்லாத ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருமே அவரை சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மிகவும் அப்செட் ஆன ராமராஜன் தேர்தல் முடிவுகள் வந்தபிறகு அ.தி.மு.க.வை விட்டு வெளியேறி தினகரன் பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

click me!