அதிசயம்...அற்புதம்...! - ரஜினியும், கமலும் விரைவில் இணையப்போறாங்களாம்! தேவைப்பட்டால் இணைவோம் என சொன்னாங்களே அது எதுக்கு தெரியுமா?

By Selvanayagam PFirst Published Dec 6, 2019, 11:31 AM IST
Highlights

சுமார் அரை நூற்றாண்டு காலமாக தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாகவும், அடையாளமாகவும் திகழ்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலக நாயகன் கமல்ஹாசனும்.
 

அண்மையில், கமல்ஹாசனின் உங்களில் நான் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ரஜினிகாந்த், "நேற்று அதிசயம் அற்புதம் நடந்தது. தற்போது அதிசயம் அற்புதம் நடக்கிறது. நாளையும் அதிசயம் அற்புதம் நடக்கும். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்" எனக் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் செய்தியாளர் சந்திப்பில், தேவைப்பட்டால் மக்கள் நலனுக்காக தானும் கமலும் இணைந்து பயணிப்போம் என கருத்து தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த். 

இதனால், அரசியலில் இருவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில், ரஜினிகாந்த் கூறியது மாதிரியே ஒரு அற்புதம் அதிசயம் நடக்கவுள்ளதாகவும், விரைவில் இருவரும் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால், நாம் எதிர்ப்பது போல் அரசியலில் அல்ல. சினிமாவில் என்பதுதான் ஆச்சரியம். ஆமாங்க, ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டெர்னே‌ஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் 'தர்பார்' படம், வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. 

இதனையடுத்து, படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த பட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. வரும் 7 - ந்தேதி சென்னை, நேரு ஸ்டேடியத்தில், மாலை 5:00 மணிக்கு, பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி - கமல் இருவரும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் 'கைதி' படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார். இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, டெல்லியிலிருந்து தளபதி-64 படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டாரின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றுள்ளார். 

அங்கு, இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். இதனையடுத்து, ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணைவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னே‌ஷனல் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அறிவிப்பு, தர்பார் இசை வெளியீட்டு விழாவின்போது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒருவேளை அறிவிப்பு வெளியானால், அது நிச்சயம் ஒரு அதிசயம்.. அற்புதம்தான். ஆனால், அது நிகழுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

click me!