ரஜினி,கமல்களுக்கு பலநூறு கோடிகளைக் கொட்டும் லைகாவின் பணம் எங்கிருந்து வருகிறது?...

By Muthurama LingamFirst Published Jul 7, 2019, 1:31 PM IST
Highlights

இன்று சினிமாவில் லாபம் பார்க்கிற தயாரிப்பாளர்கள் என்று யாருமே இல்லை. இன்றையை நம்பர் ஒன் பட நிறுவனமான லைகா உட்பட அனைவருமே தங்களது வேறு தொழிலில் சம்பாதித்த பணத்தைதான் சினிமாவில் தொலைக்கிறார்கள் என்கிறார் ஹீரோவும் பிரபல தயாரிப்பாளருமான ஆர்.கே.

இன்று சினிமாவில் லாபம் பார்க்கிற தயாரிப்பாளர்கள் என்று யாருமே இல்லை. இன்றையை நம்பர் ஒன் பட நிறுவனமான லைகா உட்பட அனைவருமே தங்களது வேறு தொழிலில் சம்பாதித்த பணத்தைதான் சினிமாவில் தொலைக்கிறார்கள் என்கிறார் ஹீரோவும் பிரபல தயாரிப்பாளருமான ஆர்.கே.

தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. அந்தவகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தினார் ஆர்கே. அதே ஷாம்புவை வைத்து கின்னஸ் சாதனை முயற்சி ஒன்றில் இறங்கப்போகும் ஆர்.கே நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அது குறித்த விவரங்களை  பகிர்ந்துகொண்ட ஆர்கே….உலகத்தில் தங்கள் தலைமுடிக்கு டை அடிக்கும் யாராவது வெறும் கையால் ஹேர் டையை தொட முடியுமா என்று கேட்டு, அதை வைத்தே கின்னஸ் சாதனை செய்து எங்களுடைய விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை உலக அளவில் நிரூபிக்க முடிவு செய்தேன்.

சரியாக 1005 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அவர்களை பயன்படுத்தச் செய்வது, அதன்மூலம் இதன் தரத்தை உறுதி செய்வது என்பதுதான் இந்தச் சாதனையின் நோக்கம்.

இந்தச் சாதனைக்காக விண்ணப்பிக்கும்போது இத்தனை நபர்களை வைத்து உங்களால் சமாளிக்க முடியுமா? இங்கே இலண்டனில் இருந்து நடுவர்கள் வேறு வருவார்கள். சரியாகச் செய்யமுடியுமா என கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டார்கள். ஒரு தயாரிப்பாளராக இத்தனை படங்கள் தயாரித்திருக்கிறேன் என்கிற ஒரே ஒரு விபரத்தை மட்டும் நான் சொன்னேன். அதன்பின் வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒப்புக்கொண்டார்கள்.

அவர்களை ஒப்புக் கொள்ளச்செய்தது ஆர்கே என்கிற பிசினஸ் மேன் அல்ல.ஆர்கே என்கிற சினிமாக்காரன். எல்லாம் அவன் செயல் என்கிற படம் மூலம் எனக்கு கிடைத்த சினிமாக்காரன் என்கிற அந்தஸ்து தான் இந்தச் சாதனைக்கு என்னை தயார்படுத்தியது.போட்டி நடத்துபவர்களையும் ஒப்புக்கொள்ள வைத்தது. சினிமா மூலம் நான் சம்பாதித்தது இதைத்தான்.

1991 இல் காசு தங்கக் காசு என்கிற படம் மூலம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் நுழைந்தேன். ஆனால் என் வீட்டையே அடமானம் வைத்துத் தான் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது.

அப்போதுதான் சினிமா எடுப்பதற்கு ஒரு வலுவான பொருளாதாரப் பின்னணி இருக்க வேண்டும், வந்தால் நூறு கோடியுடன் படம் எடுக்க வரவேண்டும், அதற்கு மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கவேண்டும் என்று நினைத்து தொழிலில் இறங்கி சாதித்து அதன் பின்பு எனது வீட்டை மீட்டு, மீண்டும் சினிமாவிற்குள் மிகவும் அழுத்தமாக அடி எடுத்து வைத்தேன்.

திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டு இருக்கிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. சினிமா ஒரு சூதாட்டம் போன்று ஆகிவிட்டது. இதனை தெளிவாக தெரிந்துகொண்டு நான் மீண்டு(ம்) வந்ததால்தான் இதுவரை வெளியான எனது படங்கள் எதுவுமே எந்த ஒரு கடன் பிரச்சனையையும் கடைசிநேர ரிலீஸ் பிரச்சினைகளையும் சந்தித்ததில்லை.அதற்கு எனக்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது என்னுடைய பிசினஸ்.

லைக்கா நிறுவனம் பல கோடி முதலீட்டில் படம் எடுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.எங்கிருந்து வருகிறது இந்த பணம்? இதுபோன்ற பிசினஸ் மூலமாகத்தான். அங்கே சம்பாதித்து இங்கே கொண்டுவந்து செலவு செய்கிறோம். சினிமாவில் சம்பாதித்து பிசினஸ் செய்ய முடியாது. பிசினஸில் சம்பாதித்துதான் சினிமாவில் முதலீடு செய்கிறோம் என்பது இதிலிருந்தே நன்றாகத் தெரியும்.இந்த வருடத்தில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன்’என்கிறார்.

click me!