ஒரு மனதை உறங்க வைத்து ஒரு மனதைத் தவிக்க விட்ட கடவுள் செய்த குற்றம்..!

By Thiraviaraj RMFirst Published May 9, 2020, 6:36 PM IST
Highlights

. தனது மன ஏக்கத்தை எப்படி வெளிப்படுத்துவான்..? காதல் தோல்வியை வைத்து ஆயிரம் பாடல்கள் வந்து இருக்கலாம். ஆனாலும் இப்பாடல் அழியாத இலக்கியமாய் நிலைத்து நிற்பன. 

திரைப்பாடல்- அழகும் ஆழமும்: 28-காலம் செய்த கோலம் - கடவுள் செய்த குற்றம்.

ஒரு திரைப் படத்துக்கு என்னவெல்லாம் வேண்டும்..? முதலில் ஒரு கதை; அதற்கான களம்; கதை மாந்தர்கள் (கதாபாத்திரங்கள்) இசை - காமிரா - எடிட்டிங் வசதி - ஓர் இயக்குநர். இவ்வளவுதான். படம் தயாராகி விடும். பாடல்கள் தேவையா..? இந்தியாவுக்கு வெளியே, குறிப்பாக மேலை நாட்டுப் படங்களில் பாடல்கள் மிக அபூர்வமாகவே இடம் பெறுகின்றன. தமிழிலும் ஏன் அப்படி இருத்தல் கூடாது...?

 

நியாயம்தான். ஓரிரு படங்கள் அப்படியும் வந்துள்ளன. ஆனாலும் பாடல்களின் பங்களிப்பு பல சமயங்களில் கதை ஓட்டத்துக்குப் பெரிதும் உதவி இருக்கிறது. 
கதைக்கு ஏற்றபடி, கதாபாத்திரம் - காட்சியுடன் பொருந்திப் பார்க்கிற வகையில் பாடல் அமைகிற போது, பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிப் போகச் செய்துவிட பாடல் நிச்சயம் உதவுகிறது.

இத்தகைய பாடல் எழுதுவதில் கண்ணதாசன் தனித்திறமை பெற்று இருந்தார். மொத்த காட்சியையும் வார்த்தைகள் மூலமே பாரவையாளர்களுக்குக் கடத்துகிற வித்தை கற்றவர் அவர். இன்னொரு சிறப்பும் உண்டு - கதையுடன் பொருத்திப் பார்க்காமல், தனியே கேட்டாலும் கேட்பவரின் வாழ்க்கையுடன் அப்பாடல் ஒன்றிப் போகும். இதுதான் கண்ணதாசன் 'டச்'! 

அவன் அவளை விரும்புகிறான். அவளும் விருபுகிறாள். ஆனால் சந்தர்ப்பம் -சூழல் சரியில்லை. அவனை ஏற்க மறுக்கிறாள். மறுப்புக்கான காரணம் இரு பக்கத்திலும் இருப்பதாக உணர்கிறான் அவன். தனது மன ஏக்கத்தை எப்படி வெளிப்படுத்துவான்..? காதல் தோல்வியை வைத்து ஆயிரம் பாடல்கள் வந்து இருக்கலாம். ஆனாலும் இப்பாடல் அழியாத இலக்கியமாய் நிலைத்து நிற்பன.

 

1963இல் வெளியான படம் - குலமகள் ராதை. எழுத்தாளர் அகிலன் படைத்த, 'வாழ்வு எங்கே' புதினத்தைத் தழுவி எடுக்கப் பட்டது. சிவாஜிகணேசன் - சரோஜாதேவி நடித்த படத்துக்கு இசை - கே.வி.மகாதேவன். கண்ணதாசன் வரிகளுக்கு உயிர் தந்தவர் - டி.எம்.சௌந்தராஜன். 

இதோ அந்தப் பாடல் வரிகள்: 
 
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை 
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி 
கடவுள் செய்த குற்றமடி 
கடவுள் செய்த குற்றமடி

மயங்க வைத்த கன்னியர்க்கு 
மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு 
முடித்து வைக்க நேரமில்லை

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை 
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி 
கடவுள் செய்த குற்றமடி 
கடவுள் செய்த குற்றமடி

உனக்கெனவா நான் பிறந்தேன் 
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த 
கடவுள் செய்த குற்றமடி

ஒரு மனதை உறங்க வைத்தான் 
ஒரு மனதைத் தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை 
இறைவன் செய்த குற்றமடி
இருவர் மீதும் குற்றமில்லை 
இறைவன் செய்த குற்றமடி

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை 
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி 
கடவுள் செய்த குற்றமடி 
கடவுள் செய்த குற்றமடி.

 

(வளரும். 
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

1.வான் உயரத்துக்கு கண்ணதாசன் உயர்ந்து நிற்பதன் காரணம் இதுதான்..!

2.பல கைகள் மாறிச் சென்ற பொம்மைக்குள் வைக்கப்பட்ட 'டைம்-பாம்...' சஸ்பென்ஸ் கலந்த பாப்பா..!

3.இழந்த சிறகை இணைக்க எண்ணி கைகளை நீட்டிய குழந்தை..!
 

click me!