இன்று அறிவிக்கப்படுமா நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை...டென்சன்...டென்சன்...டென்சன்...

By Muthurama LingamFirst Published Jul 8, 2019, 11:16 AM IST
Highlights

தேர்தல் என்ற ஒன்று நடந்ததையே பெரும்பாலானோர் மறந்துபோன நிலையில், நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரி மூன்று துணை நடிகர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த வழக்கு இன்னும் சற்று நேரத்தில்  விசாரணைக்கு வருகிறது.
 

தேர்தல் என்ற ஒன்று நடந்ததையே பெரும்பாலானோர் மறந்துபோன நிலையில், நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரி மூன்று துணை நடிகர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த வழக்கு இன்னும் சற்று நேரத்தில்  விசாரணைக்கு வருகிறது.

பலத்த சர்ச்சைகளுக்கிடையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ம் தேதி நடத்தப்பட்டது. தேர்தலை மட்டும் நடத்த அனுமதித்த நீதிமன்றம்  பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது என  உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மூன்று தினங்களுக்கு முன்பு நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த துணை நடிகர் பெஞ்சமின் உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். தேர்தலுக்கு முந்தைய நாள் வரை தபால் வாக்குகள் வராததால், சென்னைக்கு வந்து வாக்களிக்க முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டதாக அவர்கள் மூவரும் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் சங்க விதிகளின்படி, சென்னைக்கு வெளியில் வசிக்கும் உறுப்பினர்கள், தபாலில் மட்டுமே வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். தங்களைப் போல பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதால் நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளனர். இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன் ஜூலை 8-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.அதேசமயம், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்த உத்தரவை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கும் அன்றைய தினம் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில்தான் தேர்தலை ஜூன் 23 நடத்தலாம், ஆனால் வாக்குகளை எண்ணாமல் பத்திரபடுத்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கையை எப்போது நடத்தலாம் என்ற வழக்கில் இன்று  தீர்ப்பு வர இருக்கும் நிலையில், இந்த புதிய வழக்கு இன்னுமொரு புதிய குழப்பத்துக்கு வழி வகுத்துள்ளது. இந்த இரு வழக்குகளிலும் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வர உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்படுமா அல்லது மறு தேர்தலா என்று நகம் கடித்தபடி காத்திருக்கிறார்கள் இரு அணியினரும்.

click me!