காவல்துறை உயர் அதிகாரிகளின் மிருகத் தோலை உரிக்கும் ‘மிக மிக அவசரம்’...விமர்சனம்...

By Muthurama LingamFirst Published Nov 8, 2019, 10:52 AM IST
Highlights

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் பிரியங்கா என்கிற ஒரு பெண் கான்ஸ்டபிளின் ஒரு நாள் பகல் பொழுதை, அவர் தனது மூத்த அதிகாரி ஒருவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதை சொல்கிற படம் தான் ‘மி.மி.அ’.இன்னொரு பக்கம்  மிக மெல்லிய குரலில்  ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் அரசுகள், இங்கே வாழும் ஈழத்தமிழர்களை குற்றவாளியாகப் பார்க்கும்  பார்வையை எளிய மனிதர்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

”என்ன தங்கச்சி இது .. ஒரு சிங்களவனுக்கு இவ்வளவு பாதுகாப்பு தர்றீங்க . உங்க மொழி பேசுற என்னை இப்படி நடத்தறீங்க ?”என்ற ஒற்றை வசனம் போதும் ‘மிக மிக அவசரம்’ என்னமாதிரியான படம் என்று சொல்வதற்கு. ஆனால் இது தமிழ் ஈழ அரசியல் பேசுகிற படம் அல்ல. காவல்துறையின் அடிமட்டத்திலிருக்கும் ஒரு சகோதரியின் ‘மி டு’கதைதான்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் பிரியங்கா என்கிற ஒரு பெண் கான்ஸ்டபிளின் ஒரு நாள் பகல் பொழுதை, அவர் தனது மூத்த அதிகாரி ஒருவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதை சொல்கிற படம் தான் ‘மி.மி.அ’.இன்னொரு பக்கம்  மிக மெல்லிய குரலில்  ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் அரசுகள், இங்கே வாழும் ஈழத்தமிழர்களை குற்றவாளியாகப் பார்க்கும்  பார்வையை எளிய மனிதர்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு குறும்படமாக மட்டுமே எடுத்திருக்க முடிகிற ஒரு கதையை சிறிதளவும் தொய்வின்றிக் காட்சிப்படுத்தியிருப்பதில், ஒரு பதட்டத்தை படத்தின் கடைசி நிமிடம் வரை பார்வையாளனுக்குக் கடத்தியிருப்பதில் ஒரு தரமான இயக்குநராய் தமிழ் சினிமாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறார் சுரேஷ் காமாட்சி. அதிலும் அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் வானில் இருந்து விழுகிற ஒரு சொட்டு மழைத்துளி பார்க்கிற அத்தனை பேரின் கண்களைக் குளமாக்குவது நிச்சயம்.

பெண் கான்ஸ்டபிள் பாத்திரத்துக்கு இதைவிட பொருத்தமாய் ஒருவர் நடிக்க முடியுமா என்கிற அளவுக்கு பிரமாதமான நடிப்பு பிரியங்காவுடையது. நிச்சயமாக விருதுகள் காத்திருக்கின்றன. அவரது மூத்த அதிகாரியாக வருகிற ‘வழக்கு எண்’முத்துராமன் பிரியங்காவை குரூரமாக வதைத்து எடுக்கும் கொடூர அதிகாரியாக தத்ரூபமாக வாழ்ந்திருக்கிறார். அவருக்குக் கீழே பணிபுரிகிற பணிபுரிகிற பரிதாபத்துக்குரிய காவலர்களாய் ஈ.ராமதாஸ்,வி.கே.சுந்தர் ஆகியோர் சிறப்பான தேர்வு.

விஜய்சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்து எல்லோரையும் கவனிக்க வைத்த அரவிந்தன், இந்தப்படத்திலும் ஈழத்தமிழ் ஏதிலியாக நடித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் மட்டுமின்றி அவருடைய பார்வையும் நம்மைச் சுடுகிறது.

பாலபரணியின் ஒளிப்பதிவும் இஷான் தேவின் இசையும் படத்துக்கு இன்னும் கொஞ்சம் பக்கபலமாக இருந்திருக்கலாம் என்பதைத் தாண்டி படம் எடுத்துக்கொண்ட மையக் கருத்துக்காக அதன் சின்னச் சின்னக் குறைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை.

வலிமையான கருத்துக்களை மிக நேர்மையாகப் பேசும் சில நல்ல படங்கள் மக்களின் அங்கீகாரத்தைப் பெறாமல் காணாமல் போவது தமிழ் சினிமாவில் பல சமயங்களில் நடந்திருக்கின்றன. அத்தகைய அநீதி இந்த மிக மிக அவசரம் படத்துக்கு நடக்காது என்று மானசீகமாக நம்புவோம்.

click me!