பிரபல தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
15 பிரபலங்கள், 100 நாட்கள், 55 கேமராக்கள் என பிரம்மாண்ட பீடிகையோடு தொடங்கியுள்ள தமிழ் பிக்பாஸின் நேற்றைய நிகழ்ச்சி அறிமுக மேடையாகவே இருந்தது.
போட்டியில் கலந்து கொண்டவர்களில் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தவர் ஜூலி. இவர் ஒரு திரைப்பட நடிகை அல்ல, விளையாட்டு வீர மங்கை அல்ல. தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க சென்னை மெரினாக் கடற்கரையில் “சின்னம்மா சின்னம்மா ஓ.பி.எஸூ எங்கம்மா என்று முழக்கமிட்ட அதே பெண் புரட்சிப் போராளியே.
தனக்குள் போராட்டக் குணம் உண்டு என்பதை வெளி உலகிற்கு உணர்த்தும் விதமாக தலையில் சிகப்பு நிற துணியைக் கட்டி இவர் நடனம் ஆடியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
பிக் பாஸ் நமக்கு புது பாஸ்
மேலைநாடுகளில் பிரபலமாக இருந்த இந்நிகழ்ச்சியை வடமாநிலங்களே இந்தியாவுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. பிரபலமானவர்களை ஒரு வீட்டிற்குள் வைத்து வெளியுலக தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துவிட்டு அவர்கள் பிறருடன் எவ்வாறு வாழ்கின்றனர் என்பதை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதே பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஸ்டோரி லைன்.
முதல் முறையாக இந்நிகழ்ச்சி தமிழகத்தில் கால்பதித்துள்ளது. இதற்காக சென்னை பூந்தமல்லி அடுத்த தண்டலத்தில் மிகப்பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது., இந்த வீட்டிற்குள் செல்போன், வானொலி, தொலைக்காட்சி, கைக்கடிகாரம், கணினி உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை.
பசித்தால் தங்களுக்கு வேண்டியவற்றை தாங்களே சமைத்து உண்ண வேண்டும். 100 நாட்கள் வெளி உலகத் தொடர்பு முழுவதுமாக அறுபட்ட இவ்வாழ்க்கையில் பிரபலங்கள் எவ்வாறு வாழ்கின்றனர் என்பதை 53 கேமராக்கள் நிமிடத்திற்கு நிமிடம் படம் பிடித்து நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பப்படும்.