தளபதி விஜய் நடித்துவரும் தளபதி 62 திரைப்படத்தினை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். மெர்சலின் வெற்றியை தொடர்ந்து திரைக்கு வரவிருக்கும் விஜயின் படம் இது என்பதால், இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை எல்லாம் அதிகரிக்கும் படியாக இருக்கிறது தளபதி 62, குறித்து அடிக்கடி வரும் தகவல்கள்.
இந்த திரைப்படமும் ஒரு வகையில் அரசியல் சார்ந்த படம் தான் என முருகதாஸே கூறி இருக்கிறார். அரசியல் கலந்த படமாக தயாராகி வரும் தளபதி 62வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருக்கும் ஒரு பிரம்மாண்ட காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
அந்த காட்சி குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. இதன் படி இந்த படத்தில் அரசியல்வாதிகளாக நடித்திருக்கும், ராதா ரவி மற்றும் கரு.பழனியப்பன் ஆகியோரை, ஒரு பொது நிகழ்வில் வைத்து விஜய் சந்திப்பது போன்ற ஒரு முக்கிய காட்சி தான், ஆயிரம் பேர் கலந்து கொண்ட அந்த படப்பிடிப்பின் போது தயாராகி இருக்கிறது.
ஆயிரம் பேர் முன்னிலையில் வந்து, இந்த இரு அரசியல்வாதிகளையும் கெத்தாக விஜய் சந்திப்பது போல இந்த காட்சி இருக்குமாம். இவ்வளவு முக்கிய காட்சி எனும் போது இதில் வசனமும் காரசாரமாக தான் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ராதா ரவி மற்றும் கரு.பழனியப்பன் ஆகியோர், தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளை பிரதிபலிப்பதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனால் தளபதி 62-க்கான விறுவிறுப்பு இப்போது மேலும் அதிகரித்திருக்கிறது.