இந்தியனுக்கே விசாரணையா?... வாலண்ட்ரியாக வம்பிழுத்து ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு ஆப்பு வைக்கும் தொண்டர்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 6, 2020, 6:15 PM IST
Highlights

இந்தியன் 2 விபத்து குறித்து கமலிடம் விசாரணை நடத்தியதைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

இயக்குனர் ஷங்கர், பிரமாண்ட செட் அமைத்து தற்போது இயக்கி வரும் 'இந்தியன் 2 ' படப்பிடிப்பு செட்டில், கிரேன் கீழே சரிந்து விழுந்து ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த விபத்து நேர்ந்த போது கமலஹாசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்ததால், விசாரணைக்கு ஆஜராகும் படி நடிகர் கமலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த 3ம் தேதி சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் ஆஜரான கமல் ஹாசனிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

கமல் ஹாசனிடம் விசாரணை நடத்தியதற்கு அப்போதே மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட கமலே அமைதியாக விசாரணைக்கு சென்று திரும்பிவிட்டார், ஆனால் அவரது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களோ இன்னும் அடங்கியதாக தெரியவில்லை. இந்தியன் 2 விபத்து குறித்து கமலிடம் விசாரணை நடத்தியதைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

இந்தியனுக்கே விசாரணையா? வீணர்களே என்று தலைப்புடன் தொடங்கும் அந்த போஸ்டரில் ஆளுங் கட்சியை தரக்குறைவாக விமர்சித்துள்ளது அதிமுகவினரை கொதிப்படையச் செய்துள்ளது. 

மற்றொரு போஸ்டரில் நம்மவரை எல்லாருக்கும் பிடிக்கும், நம்மவருக்கு ஒண்ணுனா நாடே வெடிக்கும் என வன்முறையை தூண்டும் விதமாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதிலும் ஆளுங் கட்சியை விமர்சிக்கும் விதமான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த போஸ்டரை பார்ப்பவர்கள் ஒரு விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்த வழக்கில், அந்த இடத்தில் இருந்தவர் என்பதற்காக கமல் ஹாசனை கூப்பிட்டு விசாரித்த ஒரு குத்தமா? என அலுத்துக் கொள்கின்றனர். 

click me!