ஜெய்பீம் படத்திற்கு குவியும் பாராட்டு… கமல், பா.ரஞ்சித் ஆகியோர் டிவிட்டரில் வாழ்த்து!!

By Narendran SFirst Published Nov 2, 2021, 5:28 PM IST
Highlights

ஜெய்பீம் படம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

ஜெய்பீம் படம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் என்ற திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. வெளியாகும் முன்பே ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியானது. இதில், ரஜிஷா விஜயன், லியோ மோல் ஜோஸ், மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2டி என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும்  வழக்கறிஞராக நடிகர் சூர்யா நடித்துள்ளார். இந்த திரைப்படம் பார்த்துவிட்டு டிவிட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூர்யா மற்றும் படக்குழுவினரை பாராட்டினார். அவரது டிவிட்டர் பதிவில், ஜெய்பீம் படத்தை பார்த்து அதன் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கணமாக ஆக்கிவிட்டது. விளிம்புநிலை இருனர் மக்களின் வாழ்வியலையும் , அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமாக , கலைப்பூர்வமாகக் காட்சிப்படுத்த இயனது என்பதைக் காட்டிவிட்டீர்கள். நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும் அது பார்வையாளர் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகமிகக் கனமானதாக இருக்கிறது. ஒரு வழக்கறிஞர், ஒரு காவல் துறை அதிகாரி ஆகிய இருதரப்பும் நினைத்தால் சமூக ஒழுங்கீளங்களைத் தடுத்து நிறுத்த முடியும். அமைதியான, அதேநேரத்தில், அழுத்தமான வழக்கறிஞராக சூர்யா திறம்பட நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதைவிட, வழக்கறிஞர் சந்துருவாகவே வாழ்ந்துள்ளார். இக்கதையைத் தேர்வு செய்ததும் , அதனைப் படமாக எடுத்ததும், அதில் தானே நடிந்ததுமென மூன்று பாராட்டுகளை சூர்யா பெறுகிறார். கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் த.செ. ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். இதுபோன்ற செயற்கரிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும். பல்வேறு தாக்கங்களை தன்னுள் ஏற்படுத்தக் காரணமான ' ஜெய்பீம் " படக் குழுவினருக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துக்கள், நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். அவரை தொடர்ந்து இன்று ஜெய்பீம் படக்குழுவினருடன் படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், டிவிட்டரில் படம் குறித்த தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில், ஜெய் பீம் பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா மற்றும் ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து, இயக்குநர் பா. ரஞ்சித் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சாதி எதிர்ப்பையும், சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே - இதோ மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதைபோல இனி பல கதைகள் வரும். அது நம் தலைமுறையை மாற்றும். ஜெய் பீம் படத்தைக் கொடுத்த படக்குழுவிற்கு பெரும் நன்றிகள் எனக் குறிப்பிட்டுள்ளார். ஜெய்பீம் படம் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடக்கூடிய படமாக மாறியிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

click me!