Ashwin Kumar : அஸ்வினின் ஆணவப் பேச்சு.... அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஒன்று - ஆதரவுக் குரல் எழுப்பிய பிரபலம்

By Ganesh PerumalFirst Published Dec 8, 2021, 6:51 PM IST
Highlights

அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோம் என அஸ்வினுக்கு பிரபல தயாரிப்பாளர் ஆதரவுக் குரல் எழுப்பி உள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின் குமார். இந்நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சத்தை பெற்ற அஸ்வினுக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். சமூக வலைதளங்களில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு இணையாக இவருக்கும் பாலோவர்கள் கிடைத்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் அஸ்வினுக்கு பட வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி ‘என்ன சொல்ல போகிறாய்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் அஸ்வின். இதுவரை சமூக வலைதளங்களில் அன்பையும், ஆதரவையும் பெற்று வந்த அஸ்வின், கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சால் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். 

கதை கேட்கும் போது கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன் என்றும் அவ்வாறு இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன் என அவர் பேசியதைக் கேட்டு கோலிவுட்டே கொந்தளித்தது. ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு ஆணவப் பேச்சு தேவையா என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நெட்டிசன்களும் மீம் போட்டு கலாய்த்தனர்.

இந்நிலையில், அஸ்வினுக்கு ஆதரவாக கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது: ”சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு. பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்” என பதிவிட்டுள்ளார்.

click me!