படத்தில் செய்ததைப் போல் நிஜத்தில் எத்தனை பட்டியலின மாணவர்களின் கல்விக்கு சூர்யா உதவியிருக்கார் என ஜான் பாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக திரையுலகில் மிகவும் ஒழுக்கமானவர், தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தவர் என பார்க்கப்படுகிறார் நடிகர் சிவகுமார், அதேபோல அவரது மகன்கள் சூர்யா, கார்த்திக் ஆகியோரும் தொண்டு நிறுவனம் நடத்தி ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி சேவையாற்றி வருகின்றனர்.
சூர்யாவின் இந்த அமைப்பால் ஏராளமான ஏழை மாணவர்கள் டாக்டர், இன்ஜினியர் என எட்டா உயரங்களை கூட எட்டிப்பிடித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் அவரது குடும்பத்திற்கு என்று தனி மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது.
இந்நிலையில், பணத்தை வெள்ளையாக்கவே நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் டிரஸ்ட் நடத்துவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் சமீபத்திய பேட்டியில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். படத்தில் செய்ததைப் போல் நிஜத்தில் எத்தனை பட்டியலின மாணவர்களின் கல்விக்கு சூர்யா உதவியிருக்கார். படத்தில் இருப்பது போல் நிஜத்தில் அவர் நடந்துகொள்வதில்லை என ஜான் பாண்டியன் கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அவர், நடிகர் சிவக்குமாரை சாதி வெறியர் என கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒருமுறை கோவையில் விமான நிலையத்தில் நடிகர் சிவகுமாரை சந்தித்தேன். அப்போது அவரது மகன் சூர்யாவும் அங்கு இருந்தார். சூர்யாவை பார்த்ததும் மக்கள் ஆர்வமுடன் வந்து செல்பி எடுத்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது சிவகுமார் என்னிடம் வந்து நீங்கள் எனது மகன் சூர்யாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறினார். அதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதன்மூலம் தான் நடிகர் சிவகுமாரிடத்தில் சாதிவெறி இருப்பதை உணர்ந்ததாக ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.