
நடிகரும், தற்போதைய தமிழக முதல்வருமான சி. ஜோசப் விஜய்யின் 'கடைசி' படமான 'ஜன நாயகன்' வியாழக்கிழமை ரிலீஸ் ஆனது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டன. ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக இதைக் கொண்டாடி வருகின்றனர்.
அதிகாலை கொண்டாட்டங்கள், ரசிகர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் என நகரங்கள் மற்றும் ஊர்களில் நடந்த இந்த கொண்டாட்டங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹெச். வினோத் இயக்கிய இந்தப் படத்தில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல மாத தாமதத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
ஆளும் தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் உள்ள காசி அம்மன் தியேட்டரில், முதல்வர் விஜய் நடித்த 'ஜன நாயகன்' ரிலீஸை, தமிழக வெற்றி கழக (தவெக) தொண்டர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
தவெக நிர்வாகிகள், தியேட்டர் வாசலில் பொங்கல் வைத்து கொண்டாட்டத்தை நடத்தினர். ரசிகர்கள் விஜய்யின் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தும், படப் பாடல்களுக்கு நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த ரிலீஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு, அவர்களை தியேட்டரில் படம் பார்க்க வைத்தனர். அதிகாலை கொண்டாட்டங்கள், இசைக்கு ஆட்டம், பேப்பர்களை பறக்க விடுவது, பிரம்மாண்ட கட்-அவுட்கள், கோஷங்கள் என ராமநாதபுரம், நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தியேட்டர்கள் திருவிழா இடங்களாக மாறின.
ராணிப்பேட்டையில், விஜய் ரசிகர்கள் அவரின் ஹிட் பாடல்களுக்கு நடனமாடி, திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தினர். நீலகிரியில் மேளதாளங்களுடன் 'ஜன நாயகன்' ரிலீஸை ரசிகர்கள் வரவேற்றனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல், திருவனந்தபுரம், ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் உள்ள ரசிகர்களும், நடிகரின் பிரம்மாண்ட கட்-அவுட்களை வைத்தும், தியேட்டர்களுக்கு வெளியே கேக் வெட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழக அமைச்சர்களும் தவெக தலைவரும், முதல்வருமான விஜய்யின் 'ஜன நாயகன்' பட ரிலீஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.கே. தென்னரசு மற்றும் ஆர்.வி. ரஞ்சித் குமார் ஆகியோர் காஞ்சிபுரத்தில் ரசிகர்களுடன் இணைந்து 'ஜன நாயகன்' ரிலீஸை கொண்டாடினர்.
மேளதாளங்கள், டிஜே இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் ரசிகர்கள் படத்தை வரவேற்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள பாபு சினிமாஸ் தியேட்டரில், அமைச்சர்கள் தென்னரசு மற்றும் ரஞ்சித் குமார் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து படம் பார்த்தனர்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், அமைச்சர் தென்னரசு, தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்களுக்கு சூடான சிக்கன் பிரியாணி, லட்டு, தயிர் பச்சடி மற்றும் கத்திரிக்காய் கறி ஆகியவற்றை ஏற்பாடு செய்து, அவரே பரிமாறினார். மேலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முயற்சியாக, வனத்துறை அமைச்சர் சார்பில் ரசிகர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு மரக்கன்றை நட்டு வளர்க்க வேண்டும் என்று இந்த முயற்சி ஊக்குவித்தது.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், வியாழக்கிழமை அதிகாலையில் சென்னை சத்யம் தியேட்டருக்கு வந்து 'ஜன நாயகன்' படத்தைப் பார்த்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். சேரிங் கிராஸில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, ஸ்ரீ மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் படம் வெற்றி பெற பிரார்த்தனை செய்யப்பட்டது.
பல ரசிகர்கள் 'ஜன நாயகன்' ரிலீஸை சினிமா மற்றும் தமிழக அரசியலில் ஒரு வரலாற்று நாள் என்று கூறி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய ரசிகர் ஒருவர், "தேர்தலுக்கு முன்னாடி இது தளபதி விஜய் படம்; இப்போ இது முதல்வர் விஜய் படம். பல போராட்டங்களுக்குப் பிறகு படம் வந்திருப்பதில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். இது தமிழ் சினிமாவுக்கும், தமிழக அரசியலுக்கும் ஒரு வரலாற்று நாள்," என்றார்.
ஐஸ்வர்யா என்ற பெண் ரசிகை, "நாங்க சூப்பர் எக்ஸைட்டடா இருக்கோம், அதே சமயம் இது அவரோட கடைசிப் படம்ங்கிறதால ரொம்ப எமோஷனலாவும் இருக்கு. ஸ்கிரீன் திறக்குறதுக்காக ரெண்டு மணி நேரமா காத்துட்டு இருக்கோம்," என்றார். மற்றொருவர், "நான் சின்ன வயசுல இருந்தே தளபதி ரசிகன், எங்க அம்மாவும் ரசிகர்தான்," என்றார்.
இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் இ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். வி செல்வகுமார் தயாரிப்பு வடிவமைப்பை செய்துள்ளார். முதலில் இந்தப் படம் ஜனவரி 9-ம் தேதி பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தில் உள்ள சில காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும் எனக் கூறி, CBFC சான்றிதழ் வழங்க தாமதம் செய்ததால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
கடந்த முப்பது ஆண்டுகளில், விஜய் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்து, இந்திய சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தனது 'கடைசி' படமான 'ஜன நாயகன்' மூலம் நடிப்புக்கு பிரியாவிடை கொடுக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படும் நிலையில், லியோ, பிகில், கில்லி, போக்கிரி போன்ற படங்களின் மூலம் அவர் ஒரு மறக்க முடியாத பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.