சிம்பு தெலுங்கில் சினிமாவில் பிரபல நடிகர் ஒருவரின் மகளை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர் ஒருவரின் மகளை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்றும் இதைப்பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடிய சீக்கிரம் வெளியாகும் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான சிலம்பரசன், 2002ல் வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவானார். அதன்பிறகு ஒரு சில வெற்றிப் படங்களை கொடுத்த சிம்பு, பல சர்ச்சைகள், எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்துள்ளார். ஆனாலும், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நீடிக்கிறார்.
சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தலை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைத் தக்கவைத்திருந்தாலும், 40 வயதாகியும் திருமணமாகாமல் சிங்கிளாகவே இருக்கிறார். இதன் காரணமாக அவரது திருமணம் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கூட சிம்பு இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியானது.
முன்னதாக, சிம்புவும் நயன்தாராவை காதலித்து வந்தார். ஆனால் இருவரும் பின்னர் பிரிந்தனர். அதற்குப் பின் நடிகை ஹன்சிகாவும் சிம்புவும் காதலிப்பதாக தகவல் வெளியானது. அந்தக் காதலும் திருமணம் வரை நீடிக்கவில்லை. சமீபத்தில் தெலுங்கு நடிகை நிதி அகர்வாலும், சிம்புவும் காதலிப்பதாகவும் சொல்லப்பட்டது. அது வெறும் வதந்தியாக முடிந்தது. நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமியுடன் திருமண ஏற்பாடு நடப்பதாகவும் பேச்சு அடிப்பட்டது. ஆனால், அதுவும் பொய்யாகிவிட்டது.
இந்நிலையில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணுகிறார். அதன்படி தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் ஒருவரின் மகளை சிம்பு திருமணம் செய்ய உள்ளார் என்றும் அது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி சினிமா ரசிகர்கள் இடையே பேசுபொருளாகி இருக்கிறது.