Jacqueline Fernandez : ரூ.200 கோடி மோசடி விவகாரம்.. பிரபல பாலிவுட் நடிகை நேரில் ஆஜர்.. தீவிர விசாரணை..

By Raghupati RFirst Published Dec 8, 2021, 1:33 PM IST
Highlights

சிறையில் இருந்துகொண்டே இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்களிடம் ரூ.200 கோடி மோசடி செய்த புகார் தொடர்பாக, பிரபல பாலிவுட்  நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் அனைத்து அரசியல் கட்சியினருடனும் நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டு,  அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த இரண்டு தொழில் அதிபர்களிடம்,  லட்சக்கணக்கில் மோசடி செய்ததாகவும் சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றச்சாட்டு உள்ளது. சுகேஷ் சந்திரசேகருடன் சேர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவரது காதலியும், நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

சுகேஷ் சந்திரசேகரின் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், தனது காதலியான ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஆடம்பர பரிசுகளை வழங்கி பரிசு மழை பொழிந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அமலாக்கத்துறை சார்பில் 7 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



இந்நிலையில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இருந்து  மஸ்கட் தப்பி செல்ல முயன்ற நடிகை  ஜாக்குலினை, மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் மீது அமலாக்கப் பிரிவில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள காரணத்தால் பயணம் மேற்கொள்ள அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

மேலும், நேரில் ஆஜராகுமாறு மீண்டும் ஒரு முறை சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கப் பிரிவு. அதன்படி, விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ஜாக்குலின் இன்று ஆஜராகியுள்ளார். சிறையில் இருந்துகொண்டே இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்களிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக புகார் தொடர்பாகவும்,இந்த மோசடியில் நடிகை ஜாக்குலினுக்கு உள்ள பங்கு என்ன என்பது குறித்தும்  அமலாக்கப்பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

click me!