இடியாப்ப சிக்கலாய் நீளும் இந்தியன் 2 விவகாரம்... முற்றுப்புள்ளி வைக்க உயர் நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 30, 2021, 1:09 PM IST
Highlights

லைகா நிறுவனம் மற்றும் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான ஆர்.பானுமதியை நியமித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். 

இந்தியன் -  2  பட விவகாரம் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு ஏப்ரல் 22 தேதி முன்பு விசாரணை செய்தது. அப்போது, இயக்குனர் சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  2022ம் ஆண்டு மே மாதம் முதல் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க சங்கர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும்,  வரும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான ஐந்து மாதங்களில் படத்தை முடித்து கொடுத்து விடுவார் எனவும் தெரிவித்தார்.


தயாரிப்பு நிறுவனம் ஷங்கருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாகவும், அவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திய சங்கர் தரப்பு வழக்கறிஞர், நடிகர் விவேக் இறந்து விட்டதால் அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளதாகவும் சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவரங்களை மறைத்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இயக்குனர் சங்கருக்கு ஏற்கனவே 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீத தொகையை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பழைய விஷயங்களை மறந்து எதிர்காலத்தை கருத்தில் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு என்பது சுமூக தீர்வை ஏற்படுத்தாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியது,. ஆனால்  'இந்தியன் 2 ' பட விவகாரம் தொடர்பான வழக்கில் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்து. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

 இந்த வழக்கில் லைகா நிறுவனம் மற்றும் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான ஆர்.பானுமதியை நியமித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், நீதிபதி ஆர்.பானுமதியின் அறிக்கைக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்..” என்று நீதிபதி என்.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். 

click me!