ஷாருகான் - நயன்தாரா படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர்!!

By manimegalai aFirst Published Sep 5, 2021, 10:53 AM IST
Highlights

இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தில், தற்போது பிரபல காமெடி நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
 

இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தில், தற்போது பிரபல காமெடி நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ, தமிழில் நடிகை நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா ஆகியோர் நடித்த 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்திலேயே விஜய்யை வைத்து 'தெறி' படத்தை இயக்கினார். இந்த படம் வெற்றியடையவே, தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

'பிகில்' படத்தின் வெற்றிக்கு பின்னர், பாலிவுட் திரையுலகில் கால் பதித்துள்ளார் அட்லீ. 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதே, அட்லீ ஷாருக்கானுக்கு கதை ஒன்றைக் கூறி அவரிடம் ஓகே வாங்கி விட்டதாகவும், ஷாருக்கான் அவர் கையில் வைத்திருக்கும் படங்களை நடித்து முடித்த பின்னர், அட்லீ படத்தில் இந்த வருடத்தின் இறுதிக்குள் இணைவார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது வரை இந்த படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. 

ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் கடந்த சில நாட்களாகவே நடந்து வந்த நிலையில், ஒரு இரண்டு தினங்களுக்கு முன் இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு புனேவில் துவங்கியதாக கூறப்பட்டது. இதில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஜி.கே.விஷ்ணு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில், நயன்தாராவைத் தொடர்ந்து, ப்ரியா மணியும் இணைந்துள்ளதாக கூறப்பட்டது, இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு இந்த படத்தில் இணைந்துள்ளார். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

click me!