பிரபல பாடகி மற்றும் முன்னணி இயக்குநரான ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன் திடீர் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், விளம்பர பட இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருபவர் ராஜீவ் மேனன். இவர் தமிழில் மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மணிரத்னத்தின் குரு, பாம்பே, கடல் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். அந்த படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் இன்றுவரை பலரையும் கவர்ந்து வருவதற்கு ராஜீவ் மேனனின் கைவண்ணம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ராஜீவ் மேனனின் தாயார் பிரபல பின்னணி பாடகி கல்யாணி மேனன் ஆவார். தமிழ் மற்றும் மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 5 வயதில் இருந்தே இசையின் மீது அதீத ஆர்வம் கொண்டவராக இருந்த கல்யாணி மேனன், 1973ம் ஆண்டு அபலா என்ற படம் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமானார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழில் பல பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக அலைபாயுதே, முத்து, காதலன், விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் கல்யாணி மேனன் பாடிய பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. தமிழில் கடைசியாக 96 படத்தில் இடம் பெற்ற காதலே காதலே பாடலை பாடியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
80 வயதான கல்யாணி மேனன் பக்கவாதம் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி சற்று நேரத்திற்கு முன்பு மரணமடைந்தார். கல்யாணி மேனனின் இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் நாளை மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல பாடகியும், இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயாருமான கல்யாணி மேனனின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.