பிரபல இயக்குனர் இளவேனில் மாரடைப்பால் மரணம்..! திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்..!

By manimegalai aFirst Published Jan 3, 2021, 9:52 AM IST
Highlights

பிரபல இயக்குனரும், எழுத்தாளருமான இளவேனில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவிற்கு தி.மு.க தலைவர் முக. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
 

பிரபல இயக்குனரும், எழுத்தாளருமான இளவேனில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவிற்கு தி.மு.க தலைவர் முக. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் இளவேனில், சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர், கருணாநிதியின் சாரப்பள்ளம் சாமுண்டி என்ற கதையை அடிப்படையாக வைத்து 'உளியின் ஓசை' என்ற படத்தை இயக்கினார். மேலும் 'வாளோடும் தேன் சிந்தும் மலர்களோடும்', புரட்சியும், எதிர்ப்பு புரட்சியும்' உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட நூல்களையும், கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். 

இந்நிலையில் 73 வயதாகும் இவர், மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்த நிலையில், நேற்று திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இன்று இவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இவரது உடலுக்கு பிரபலங்கள் பலர் தங்களுடைய அஞ்சலியை செலுத்திவிட்டு, இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது.. "முத்தமிழறிஞர் கருணாநிதி அவர்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பரும், கவிஞருமான இளவேனில் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இடதுசாரிச் சிந்தனைக்குச் சொந்தக்காரர். கருணாநிதியின் சாரப்பள்ளம் சாமுண்டி என்ற கதையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட உளியின் ஓசை திரைப்படத்தை இயக்கியவர். எழுத்தாளராக இருந்த இளவேனில் இயக்கிய முதல் படமும் இதுதான். முதலமைச்சராக இருந்த கருணாநிதி அந்தத் திரைப்படத்தைப் பார்த்து விட்டு, எனது கதையின் சாரத்தைக் காப்பாற்றும் விதத்தில் படத்தை மிகுந்த கவனத்துடன் எடுத்துள்ளார் என்று கவிஞர் இளவேனிலை மனதாரப் பாராட்டியதை இந்த நேரத்தில் நெகிழ்வுடன் நினைவு கூர்கிறேன்.

புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம் என்ற இளவேனில் புத்தகத்திற்கு முத்தான முன்னுரை வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது இதயத்தில் அவருக்குத் தனி இடம் கொடுத்து வைத்திருந்தார். இலக்கிய உலகத்திற்கும், திரையுலகத்திற்கும் பேரிழப்பாகியுள்ள அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், சக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!