என்னாது! திரும்பவுமா? இம்சை அரசன் 24ஆம் புலிகேசி அதெல்லாம் இல்லைங்க என வடிவேலு தரப்பு மறுத்துள்ளது.
தமிழ் சினிமாவின் தனக்கென அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் வடிவேலு. இவர் முதன் முறையாக நாயகனாக நடித்த திரைப்படம் இம்சைஅரசன் 23ஆம் புலிகேசி. இப்படத்தினை 2006ஆம் ஆண்டு சிம்புதேவன் இயக்கியிருந்தார்.
இப்படம் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' படத்தின் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டன. மீண்டும் இதில் வடிவேலு கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். முதல் பாகத்தை தயாரித்த இயக்குநர் ஷங்கரே இப்படத்தைத் தயாரிக்க முன்வந்தார். லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் ஷங்கரிடம் தயாரிப்பு பணிகளைக் கொடுத்தது.
இம்சை அரசனுக்காக பிரம்மாண்ட அரங்கு அமைத்துப் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வடிவேலுக்கும் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட சம்பள பிரச்சினையே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கான காரணமாக சொல்லப்பட்டது.
இந்தப் பிரச்சனை நடிகர் சங்கம் வரை சென்றும் முடிவு எட்டப்படாமல் இருந்த நிலையில் வடிவேலு மீண்டும் படக்குழுவுடன் இணைந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. மேலும் ஷங்கர் இயக்கவுள்ள இந்தியன் 2 படத்திலும் அவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாக வடிவேலுவின் மேனேஜரோ, “இது முற்றிலும் தவறான செய்தி. இன்னும் அப்பிரச்சினைக்கான தீர்வு காணவில்லை. 24ஆம் புலிகேசி படத்தில் நடிப்பது தொடர்பாக இன்னும் எங்கள் தரப்பில் இருந்து அறிவிக்கவில்லை” என்று சொன்னார்.
இந்தியன் 2 திரைப்படம் குறித்து கேட்டதற்கு, “அதுவும் வதந்தி, ஏன் எங்களைக் கேட்காமல் அவர்களாகவே இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று கூறினார்.