விமர்சனம் ‘சார்லி சாப்ளின் 2’ மட்டன் பிரியாணின்னு நம்பி வந்தா லெமன் சாதம் போடுறீங்களே பாஸ்?

By Muthurama LingamFirst Published Jan 25, 2019, 7:17 PM IST
Highlights

சார்லி சாப்ளின் முதல் பாகத்திலும் தற்போது வெளியாகி உள்ள இரண்டாம் பாகத்திலும் பிரபு தேவா- பிரபு இணைந்து நடித்தும் ஷக்தி சிதம்பரமே இயக்கிதை தவிர இரு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சார்லி சாப்ளின் முதல் பாகத்திலும் தற்போது வெளியாகி உள்ள இரண்டாம் பாகத்திலும் பிரபு தேவா- பிரபு இணைந்து நடித்தும் ஷக்தி சிதம்பரமே இயக்கிதை தவிர இரு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


 
படத்தை கலகலப்பாக எடுக்க வேண்டும் என்கிற அவர்களின் திட்டம் மட்டன் பிரியாணி செய்ய நினைத்து லெமன் சாதத்தில் முடிந்த கதையாகி விட்டது. திருமண ஏற்பாடு செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் பிரபு தேவா. 99 திருமணங்களை வெற்றிகரமாக நடத்திய அவரது நிறுவனத்தில் பிரபுதேவாவின் திருமணத்தை 100-வதாக நடத்த விரும்புகிறார்கள் அவரது பெற்றோர்கள்.

பிரபு தேவாவுக்கோ, நிக்கி கல்ராணி மீது காதல்! இருவரும் காதலாகி கசிந்துக, நிக்கிக்கு அவரது நண்பர் ஒருவர் முத்தம் கொடுத்த புகைப்படம் சிக்கி விடுகிறது. திடீர் திருப்பமாக நிக்கியின் நடத்தை மீது சந்தேகம் கிளப்புகிறார், பிரபுதேவாவின் நண்பர் விவேக். அதற்கு ஆதாரம் ஒன்றையும் விவேக் சமர்ப்பிக்க, திருமணத்தில் சிக்கல். பிரபு தேவா திட்டி அனுப்பிய வீடியோ நிக்கிக்கு வந்து சேர குழப்பங்கள் கும்மியடிக்கின்றன. 

நிக்கியின் தந்தைதான் நடிகர் பிரபு. இதற்கிடையே நிக்கியின் கதாபாத்திரமான சாரா பெயரில் இன்னொரு பெண் நுழைய, கதையில் திருப்பங்களும் கலகலப்புமாக போகிறது. ஆனால், அந்த புகைப்படமும், வீடியோவும் உண்மையில்லை எனத் தெரிய வந்து மீண்டும் திருமணத்திற்கு தயாராகும் போது இன்னொரு சாரா பிரபு தேவாவை பலி வாங்க வருகிறார். இதனால், திருமணத்தில் கூச்சல், குழப்பம் நிலவுகிறது. இதையெல்லாம் தாண்டி பிரபுதேவா நிக்கி திருமணம் முடிந்ததா என்பதே க்ளைமேக்ஸ்.

படம் மொத்தமே இரண்டு மணி நேரம் என்பது மட்டுமே ஒரே ஆறுதல். வெறும் 20 நிமிடம் யோசித்தால் கூட இதைவிட பிரம்மாண்டமான கதையைப் உருவாக்கி விடலாம். அனைவருக்கும் தெரிந்த புளித்துப்போன அதர பழசான டெம்ப்ளேட் திரைக்கதை. துளிக்கூட லாஜிக்கே இல்லாத ஒரு திரைக்கதையை உருவாக்கி அங்காங்கே கிச்சுகிச்சு மூட்ட முயன்று சொரிந்து விட்டிருக்கிறார்கள். 

2வது பாதி ஓ.கே. கடை 20 நிமிடம் கல்யாண களேபரங்களால் சில காட்சிகள் கலகலப்பூட்டுகிறது. பிரபுதேவாவின் டாஸ் மூவ்மெண்டுகள் எடுபடவில்லை. வெயிட்டான ரோல் பிரபுக்கு இருக்கும் என நம்பி போனால் மனுஷன் அவர் வந்து போகும் காட்சிகளில் சாப்பாட்டுக்கு மட்டுமே பாதி நேரம் அலைகிறார். ஸ்கீரினை மறைக்க அவரது கதாபாத்திரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள் அவ்வளவே. 

ஜெயசித்ராவின் மகன் அம்ப்ரீஸ் இசை தாளம்போட வைக்கிறது. அதிலும் ’சின்ன மச்சான்’ பாடல் பெண்களை முணுமுணுக்க வைக்கிறது. ஒளிப்பதிவு உள்ளிட்ட பல டெக்னீசியன்களும் இந்தப்படத்திற்கு இது போதும் என்கிற அளவிற்கே உழைத்து களைத்திருப்பது படத்தில் பிரதிபலிக்கிறது. கொஞ்சமாக சிரிக்க நினைப்பவர்கள் ஒரு எட்டு போய் சார்லி சாப்ளின்-2 படத்துக்கு சென்று மொய் வைத்து விட்டு வரலாம்... விருந்துக்கு ஆசைப்பட்டு போனால் நிர்வாகம் பொறுப்பல்ல...  

click me!