பின்னனி பாடகராக அறிமுகமான மாற்றுத்திறனாளி இளைஞர்! - சீறு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு! - ஆதரவு தரும்படி டி.இமான் உருக்கமான வீடியோ பதிவு!

By Selvanayagam PFirst Published Dec 2, 2019, 10:37 PM IST
Highlights

கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வாசம் படத்திலிருந்து  கண்ணானே கண்ணே பாடலை பாடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். 

திருமூர்த்தியின் இந்த வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான், அந்த இளைஞரை நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவருக்கு வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்திருந்தார். 

கொடுத்த வாக்கை காப்பாற்றும் வகையில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞரான திருமூர்த்தியை பின்னணி பாடகராக அறிமுகம் செய்துவைத்து மகிழ்ந்த டி.இமான், ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'சீறு' படத்திற்காக திருமூர்த்தி பாடியுள்ள செவ்வந்தியே பாடல், டிசம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படியே, டி.இமான் இசையில் திருமூர்த்தி பாடியுள்ள செவ்வந்தியே பாடலை, சீறு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்காக வெளியிட்டுள்ள படக்குழு. அத்துடன், 90 நிமிடம் கொண்ட பாடலின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. 

https://twitter.com/immancomposer/status/1200726204803715074

டி.இமானின் அசத்தலான மெலடி இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை, கவிஞர் பார்வதி எழுதியுள்ளார். திருமூர்த்தியின் ஆத்மார்த்தமான குரலில் வெளிவந்திருக்கும் செவ்வந்தியே பாடல், ரசிகர்களை மெய்மறக்க செய்து வருகிறது.

இந்த பாடல் மேக்கிங் வீடியோவுடன், திருமூர்த்தியுடன் இருக்கும் மற்றொரு வீடியோவையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள டி.இமான், "உண்மையில் இந்த இசை பிடித்திருந்தால், குரல் பிடித்திருந்தால் செவ்வந்தியே பாடலை பலருக்கு ஷேர் செய்யுங்கள். இதுதான் திருமூர்த்தி போன்ற கலைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும்" என அன்பு கோரிக்கை விடுத்துள்ளார். 

https://twitter.com/immancomposer/status/1201486294783647744

திறமைக்கு மதிப்பளித்து திருமூர்த்தியை பின்னணி பாடகராக அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அவருக்கு ஆதரவு தரும்படி கோரியிருக்கும் டி.இமானை, ரசிகர்கள் வெகுவாக பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

click me!