மூன்று மாதங்களாக நடத்தப்படாத வாக்கு எண்ணிக்கை...நடிகர் சங்கத்துக்கு நிரந்தர பூட்டு...

By Muthurama LingamFirst Published Aug 27, 2019, 5:12 PM IST
Highlights

நடிகர் சங்கத்தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகியும் அதன் வாக்கு எண்ணிக்கைக்கு கோர்ட் தடை விதித்துள்ளதால் தயாரிப்பாளர் சங்கம் போலவே இந்த சங்கமும் முடங்கும் நிலைக்கு வந்துவிட்டதாக பல முனைகளில் இருந்து புலம்பல்கள் வரத்துவங்கியுள்ளன.

நடிகர் சங்கத்தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகியும் அதன் வாக்கு எண்ணிக்கைக்கு கோர்ட் தடை விதித்துள்ளதால் தயாரிப்பாளர் சங்கம் போலவே இந்த சங்கமும் முடங்கும் நிலைக்கு வந்துவிட்டதாக பல முனைகளில் இருந்து புலம்பல்கள் வரத்துவங்கியுள்ளன.

நாசர், விஷாலின் பாண்டவர் அணியும் பாக்யராஜ், ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதிய தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ந்தேதி நடத்தப்பட்டு கோர்ட்டு உத்தரவினால் 2 மாதங்களாக ஓட்டுகளை எண்ணாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடங்கி உள்ளன. கோர்ட் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்ததில் தமிழக அரசின் தலையீடு இருப்பதாகக் கருதுவதால் இரு அணிகளுமே தற்போது வாக்கு எண்ணிக்கை நடக்கவேண்டுமென்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை.

4 மாடியில் தயாராகும் நடிகர் சங்க கட்டிடத்துக்கு ஏற்கனவே ரூ.30 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளனர். தற்போது 4-வது மாடியில் மேற்கூரை அமைக்கும் பணியும் உள்பூச்சு மற்றும் உள் அலங்கார வேலைகளும் பாக்கி உள்ளன. இவற்றுக்கு மேலும் ரூ.15 கோடி வரை தேவைப்படும் என்கின்றனர்.தேர்தலில் வெற்றி பெற்று புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றதும் நட்சத்திர கலைவிழா நடத்தி கட்டிட பணிக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவோம் என்று இரு தரப்புமே  அறிவித்து இருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. ஏற்கனவே வங்கி இருப்பில் இருந்த தொகை செலவாகி விட்டதால், கட்டிட பணியை தொடர பணம் இல்லை என்று நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கட்டுமான வேலைகள் பாதிக்கப்பட்டு  அனைத்து பணிகளும் சுத்தமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மூத்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் சுமார் 600 பேருக்கு மாதம்தோறும் பென்சன் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து வழங்க தற்போது பணம் இல்லை என்றும் கூறப்படுகிறது. நடிகர் சங்க தேர்தல் வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அப்போதும் கோர்ட்டில் வாக்கு எண்ணிக்கை நடத்த தீர்ப்பு வழங்காவிட்டால் நடிகர் சங்கத்துக்குப் பூட்டுப்போட்டுவிட்டுப் போகவேண்டியதுதான்.

click me!