இனி எந்த பிரச்சனையும் வரக்கூடாது ‘முருகா’... பழனி கோயிலில் வழிபாடு நடத்திய சிவகார்த்திகேயன்...! ​

By Kanimozhi PannerselvamFirst Published Aug 12, 2021, 2:43 PM IST
Highlights

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இன்று காலை நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினருடன் பழனி கோவிலுக்குச் சென்று முருகனை வழிபட்டார். 

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில், 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீயாய் நடந்து வருகின்றன. இதையடுத்து லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனும் ஒன்றாக இணைந்து டான் என்ற படத்தை தயாரிக்க உள்ளது. அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வரும் டான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த ஹீரோயின் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா , சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி ஷிவாங்கி, ஆர்ஜே விஜய், முனீஸ்காந்த், பாலா சரவணன், காளி வெங்கட் ஆகியோர் நடிக்க உள்ளனர். 

கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி அன்று கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டான் படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பமானது. இடையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு தாமதமான நிலையில், சமீபத்தில் பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை போன்ற பகுதிகளில் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனைமலை வனப்பகுதிக்கு அருகே ஷூட்டிங் நடைபெற்ற வந்த போது, சிவகார்த்திகேயன் பட படப்பிடிப்பு என்பதை அறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குவிய ஆரம்பித்தனர். இந்த தகவலை கேள்விப்பட்ட போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

அப்போது தான் டான் படக்குழுவினர் எவ்வித அனுமதியும் பெறாமல் படப்பிடிப்பு நடத்தி வருவது தெரியவந்தது. இதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், முறையாக அனுமதி பெறாமல் படப்பிடிப்பை நடத்தியதால் வருவாய்த்துறையினர் படப்பிடிப்பு குழுவினருக்கு ரூ.19,400 அபராதம் விதித்தனர். மேலும் அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியது, அதிகளவில் கூட்டம் கூட்டியது போன்ற குற்றங்களுக்காக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட 31 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இறுதிகட்ட படப்பிடிப்பு பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இன்று காலை நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினருடன் பழனி கோவிலுக்குச் சென்று முருகனை வழிபட்டார்.  மின்இழுவை ரெயில் மூலம் மேலே சென்ற சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்து அங்கிருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தற்போது சிவகார்த்திகேயனின் முருகன் கோவில் விசிட் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

click me!