ஏற்கனவே , சின்னத்திரையை நம்பி இருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும், 21 நாள் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, மேலும் கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலை நீடிப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்துள்ளார் பிரதமர் மோடி.
இந்நிலையில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் சின்னத்திரையை சேர்ந்த, நலிந்த கலைஞர்களுக்கு, நிதி உதவி அளித்து உதவியுள்ளார் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்.
ஏற்கனவே வெள்ளித்திரையில் பணியாற்றி வரும் பெப்சி கலைஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும். அவர்களுக்கு உதவ வேண்டும் என பெப்சி அமைப்பின் சார்பாக அதன் தலைவர், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்ட அறிக்கையின் பலனாக பல முன்னணி நடிகர்கள் பெப்சி கலைஞர்களுக்கு அரிசியாகவும், பணமாகவும் கொடுத்து உதவினர்.
இதையடுத்து நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டுமென, நடிகர் சங்க தனி அதிகாரி விடுத்த அறிக்கையின் பெயரில், நடிகர் யோகிபாபு, நடிகர் விவேக், ஐசரி கணேஷ், உள்ளிட்ட பலர் நலிந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர்.
இதேபோல் வேலையில்லாம், கஷ்டப்படும் சின்னத்திரையை சேர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வந்த நிலையில், சின்னத்திரை நடிகர்களுக்கு உதவும் வகையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், ரூபாய் 1 லட்சம் நிதி கொடுத்து உதவியுள்ளார். இதற்க்கு சின்னத்திரை நடிகர் சங்கத்தை சேர்த்தவர்கள் தங்களுடைய நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.