தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திடாத முயற்சி… ஜெய் பீம் படத்தில் நடித்தது ஏன்? மனம் திறந்த நடிகர் சூர்யா.!

By manimegalai aFirst Published Oct 28, 2021, 7:57 PM IST
Highlights

வழக்கறிஞராக இருந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில் ஊதியம் பெற்றதில்லை. போற்றுதலுக்கு உரிய நீதிபதி சந்துருவை கொண்டாட தவறிவிட்டார்கள் என சூர்யா கூறியுள்ளார்.

வழக்கறிஞராக இருந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில் ஊதியம் பெற்றதில்லை. போற்றுதலுக்கு உரிய நீதிபதி சந்துருவை கொண்டாட தவறிவிட்டார்கள் என சூர்யா கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா முதல் முறையாக வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ஜெய் பீம். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 1990-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை கதைக்களமாக கொண்ட இப்படத்தை த.செ.ஞானவேல், உருவாக்கியிருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காக போராடும் வழக்கறிஞர் சந்துருவாக, சூர்யா நடித்துள்ளார். இவருடன் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய் காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஜெய் பீம் திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா மனம் திறந்து பேசியிருக்கிறார். நடிகர் சாந்தனுவின் மனைவியும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான கீர்த்தியுடன் இன்ஸ்டாகிராம் லைவில் தோன்றிய சூர்யா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கிறார்.

ஜெய பீம் படத்தில் நடிக்க ஆரம்பிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்னதாகவே, நீதிபதி சந்துரு ஐயாவை சந்தித்தேன் என்று கூறியுள்ள சூர்யா, இயக்குநர் த.செ.ஞானவேல் தான் அதற்கு ஏற்பாடு செய்தார் என்றும் தெரிவித்துள்ளார். தம்மிடம் நீதிபதி சந்துரு பற்றி கூறும்போது அவர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்றனர். அவரைப் பற்றிய நிறைய உத்வேகம் தரும் செய்திகளைக் ஞானவேல் கூறியதாக சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

சந்துரு  வழக்கறிஞராக இருந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளுக்கு பணம் பெற்றதில்லை என்பதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள சூர்யா, அவரிடம் பேசியும், அவரைப் பற்றி, அவரது இளமைக் கால துடிப்பைப் பற்றி பேசியும், படித்தும் தெரிந்து கொண்டேன். அவருடைய கதை இந்த உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுசேர வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். நீதிபதி சந்துரு போன்றோர் போற்றுதலுக்கு உரியவர்கள். ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கான உரிய மரியாதையை செய்யவில்லை. நாங்கள் அவருடைய கதையைச் சொல்லி இளம் மனதில் அக்கினிப் பிரவேசம் செய்ய எண்ணினோம். அதன் சாட்சிதான் ஜெய் பீம் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் படத்திற்காக  உயர் நீதிமன்ற வளாக செட் போட்டுள்ளோம். இது தமிழ்த் திரையுலகில் இதுவரை யாரும் செய்திடாத முயற்சி. இந்த முயற்சிகள் எல்லாம் தான் தம்மை முதல் முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வைத்தது என்று சூர்யா தெரிவித்துள்ளார். 'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

click me!