நடிகர் புனீத் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்... ராஜ்குமார் நினைவிடம் அருகே அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!

By Asianet TamilFirst Published Oct 31, 2021, 8:58 AM IST
Highlights

புனீத்தின் உடல் அவருடைய தந்தை ராஜ்குமார், தாய் பர்வதம்மாள் ஆகியோர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே புனீத்தின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் உடல் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட புனீத் ராஜ்குமார் (46), கடந்த 29-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவருடைய மரணம் கர்நாடக மக்கள், கன்னட திரையுலகையும் தாண்டி பல தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த இரு நாட்களாக அவருடைய உடலுக்கு ரசிகர்களும், பொதுமக்களும் சாரை சாரையாகத் திரண்டு அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய திரையுலகப் பிரபங்களும் புனீத் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

புனீத் ராஜ்குமாரின் மூத்த மகள் திரிதி மேல் கல்வியை அமெரிக்காவில் படிப்பதால், அவருடைய வருகைக்காக மொத்தக் குடும்பமும் காத்திருந்தது. இதனிடையே அவர் அமெரிக்காவிலிருந்து நேற்று மாலை பெங்களூரு திரும்பினார். தன் தந்தையின் உடலைப் பார்த்து அவர் கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். மகள் பெங்களூரு திரும்பியதால், ஞாயிறு காலை புனீத் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை 5 மணியளவில் புனீத்தின் இறுதிச் சடங்குகள் தொடங்கின.

கன்டீரவா மைதானத்திலிருந்து கன்டீரவா ஸ்டூடியோவுக்கு புனீத்தீன் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. ராகவேந்திரா ராஜ்குமாரின் மகன் வினய் ராஜ்குமார் இறுதிச் சடங்குகளைச் செய்தார்.புனீத்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது. அதன்படி குண்டுகள் முழங்க போலீஸார் அரசு மரியாதை அளித்தனர். புனீத்தின் உடல் அவருடைய தந்தை ராஜ்குமார், தாய் பர்வதம்மாள் ஆகியோர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே புனீத்தின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

click me!