உழவர்‌ என்ற ஒற்றை அடையாளத்துடன் வெட்டவெளியில் போராடும் விவசாயிகள்! கார்த்தி வெளியிட்ட அறிக்கை!

By manimegalai aFirst Published Dec 4, 2020, 12:58 PM IST
Highlights

நடிகர் கார்த்தி கடந்த இரண்டு வருடங்களாக உழவன் பவுண்டேஷன் மூலம் பல விவசாயிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

நடிகர் கார்த்தி கடந்த இரண்டு வருடங்களாக உழவன் பவுண்டேஷன் மூலம் பல விவசாயிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

நாளும்‌ நம்‌ பசி தீர்க்க பாடுபடும்‌ இந்திய நாட்டின்‌ உழவர்கள்‌, பெருந்திரளாக கடும்‌ பனிப்பொழிவையும்‌, கொரொனா அச்சத்தையும்‌ பொருட்படுத்தாமல்‌ 'உழவர்‌ என்ற ஒற்றை அடையாளத்துடன்‌ தலைநகர்‌ டெல்லியில்‌ கடந்த ஒரு வாரமாக வெட்டவெளியில்‌ போராடி வருகின்றனர்‌. விவசாயத்தில்‌ பெண்களின்‌ பங்களிப்பும்‌ பெரும்பங்கு என்ற வகையில்‌ பெண்களும்‌ பெருந்திரளாகப்‌ பங்கெடுத்து போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது.

நாளும்‌, பொழுதும்‌ பாடுபட்டால்‌ தான்‌ வாழ்க்கை என்ற நிலையில்‌ தங்கள்‌ மாடு, கழனி மற்றும்‌ பயிர்களை அப்படியப்படியே போட்டுவிட்டு, குடும்பத்தாரைப்‌ பிரிந்து இந்தியாவின்‌ அனைத்து பகுதிகளிலும்‌ உள்ள விவசாயிகள்‌ தொலைதூரம்‌ பயணித்து வந்து தீரத்துடன்‌ போராடி வரும்‌ செய்திகள்‌ நம்‌ ஒவ்வொருவர்‌ உள்ளத்தையும்‌ உலுக்குகிறது!

தண்ணிர்‌ பற்றாக்குறை, இயற்கை சீற்றங்களால்‌ ஏற்படும்‌ துயர்கள்‌, விளைப்‌பொருள்களுக்கு உரிய விலையில்லாமை உள்ளிட்டப்‌ பல பிரச்சினைகளால்‌ ஏற்கனவே பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும்‌ உழவர்‌ சமூகம்‌, சமிபத்தில்‌ அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண்‌ சட்டங்களால்‌ தாங்கள்‌ இன்னும்‌ மிக மோசமாக பாதிப்படைவோம்‌ என கருதுகிறார்கள்‌!

தங்கள்‌ மண்ணில்‌ தங்களுக்கிருக்கும்‌ உரிமையும்‌, தங்கள்‌ விளைப்‌ பொருட்கள்‌ மீது தங்களுக்கிருக்கும்‌ சந்தை அதிகாரமும்‌ பெரும்‌ முதலாளிகள்‌ கைகளுக்கு இந்த சட்டங்களால்‌ மடைமாற்றம்‌ செய்யப்பட்டுவிடும்‌ என்றும்‌, ஆகவே இந்தச்‌ சட்டங்களை விலக்கிக்‌ கொள்ள வேண்டும்‌ என்பதும்‌ அவர்களின்‌ வேண்டுகோளாக உள்ளது. ஆகவே, போராடும்‌ விவசாயிகளின்‌ குரலுக்கு செவி சாய்த்து அவர்கள்‌ கோரிக்கைகளைப்‌ பரிசீலித்து, உழவர்கள்‌ சுதந்திரமாக தொழில்‌ செய்வதை மத்திய அரசாங்கம்‌ உறுதிப்படுத்த வேண்டும்‌ என்பதே அனைத்து மக்களின்‌ எதிர்பார்ப்பு அதை அரசு தாமதிக்காமல்‌ செய்ய வேண்டும்‌ என வலியுறுத்துகிறோம்‌. என தெரிவித்துள்ளார். 

நடிகர் கார்த்தியின் இந்த அறிக்கைக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

click me!